Published : 06 Oct 2022 07:26 PM
Last Updated : 06 Oct 2022 07:26 PM

தீபாவளியை முன்னிட்டு சென்னை - தி.நகரில் போக்குவரத்து மாற்றம்; 3 இடங்களில் தற்காலிக வாகன நிறுத்தம்

சென்னை தி.நகர் | கோப்புப் படம்

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை - தி.நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்க தி.நகருக்கு பொதுமக்கள் அதிக அளவில் வருகைத் தருவார்கள் என்பதால் 8-ம் தேதி முதல் 24-ம் தேதி தி.நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விவரம்:

தேவைக்கேற்ப ஆட்டோக்களின் இயக்கமானது, தியாகராய சாலை மற்றும் தணிகாசலம் சாலைச் சந்திப்பிலிருந்தும், ரோகிணி சிக்னல் சந்திப்பிலிருந்தும், வடக்கு உஸ்மான் சாலை மற்றும் கோட்ஸ் சாலைச் சந்திப்பிலிருந்தும், வடக்கு உஸ்மான் சாலை மற்றும் மகாராஜபுரம் சந்தானம் சாலை சந்திப்பிலிருந்தும், பிருந்தாவன் சந்திப்பிலிருந்தும் மற்றும் கண்ணம்மாபேட்டைச் சந்திப்பிலிருந்தும் பனகல் பூங்கா நோக்கிச் செல்ல தடை செய்யப்படும்.

சரக்கு மற்றும் வணிக ரீதியான வாகனங்கள் தி நகர் பகுதிக்குள் வியாபார நேரத்தில் செல்லத் தடை செய்யப்படும். இத்தகைய வாகனங்கள் இரவு 11 மணி முதல் காலை 7 மணி வரை தி நகர் பகுதிக்குள் செல்ல அனுமதிக்கப்படும்.

ஏற்கனேவே பயன்பாட்டில் உள்ள தியாகராய சாலை, ஜி.என்.செட்டி சாலை மற்றும் தணிகாசலம் சாலை பன்னடுக்கு வாகன நிறுத்தமிடங்கள் தவிர விடுமுறை நாட்களில் பிரகாசம் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளி, பாஷ்யம் சாலையில் உள்ள இராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி மற்றும் தண்டபானி சாலையில் உள்ள இராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி வளாகங்களில் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x