Published : 08 Nov 2016 09:14 AM
Last Updated : 08 Nov 2016 09:14 AM

முதல்வருக்கு 47-வது நாளாக தொடர்ந்து சிகிச்சை: நடிகர்கள் பிரபு, விக்ரம் பிரபு நலம் விசாரிப்பு

டாக்டர்களின் தொடர் சிகிச்சை யால் முதல்வரின் உடல்நிலை வேகமாக குணமடைந்து வரு கிறது. நடிகர்கள் பிரபு, விக்ரம் பிரபு ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து முதல்வரின் உடல்நிலை பற்றி விசாரித்தனர்.

முதல்வர் ஜெயலலிதா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்கள் ஆலோசனையின்படி அப்போலோ மருத்துவமனையின் மூத்த டாக்டர்கள் குழுவினர் முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், சிங்கப்பூர் மருத்துவமனையில் இருந்து வந்துள்ள பெண் பிசியோதெரபி நிபுணரும் முதல்வருக்கு தொடர்ந்து பிசியோதெரபி சிகிச்சை அளித்து வருகிறார். 47 நாட்களாக டாக்டர்கள் அளித்து வரும் தொடர் சிகிச்சையால் முதல்வரின் உடல்நிலை வேகமாக குணமடைந்து வருகிறது.

இந்நிலையில் நடிகர்கள் பிரபு, விக்ரம் பிரபு ஆகியோர் நேற்று மருத்துவமனைக்கு வந்து முதல்வரின் உடல்நிலை குறித்து மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் டாக்டர்களிடம் கேட்டறிந்தனர். பின்னர் நிருபர்களிடம் நடிகர் பிரபு கூறும்போது, ‘‘முதல்வர் நலமாக இருக்கிறார். இன்னும் 2 அல்லது 3 நாட்களில் வேறு வார்டுக்கு மாற்றப்படுவார். விரைவில் வீடு திரும்புவார். கோட்டைக்கும் வருவார்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x