

சென்னை: ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த ஜேசிடி பிரபாகர் கூறிய ரூ.41 ஆயிரம் கோடி ரகசியம் தொடர்பாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அரசுக்கு மார்க்சிஸ்ட் பாலகிருஷ்ணன் கோரிக்கை வைத்துள்ளார்.
அதிமுக ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த ஜேசிடி பிரபாகர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசும்போது, "ஓ.பன்னீர்செல்வம் அனுமதி அளித்தால் 41 ஆயிரம் கோடி ரூபாய் எனும் அந்த ரகசியத்தை நான் விரைவில் வெளியிடுவேன். அப்பொழுது வெட்ட வெளிச்சமாக பல உண்மைகள் இந்த நாட்டு மக்களுக்கு வெளிவரும்" எனக் கூறினார்.
இந்நிலையில் இது தொடர்பாக மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலாகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில், " ரூ.41 ஆயிரம் கோடி ரகசியத்தை வெளியிடுவேன்' என்று அதிமுகவின் ஓபிஎஸ் தரப்பினரான ஜேசிடி பிரபாகரன், எடப்பாடி பழனிச்சாமியை எச்சரிக்கும் பேச்சு ஊடகங்களில் வந்துள்ளது. அவ்வளவு பிரம்மாண்டமான தொகை யாருடையது?அது ஏதாவது கணக்கிற்கு உட்பட்டதா?. வருமான வரி செலுத்தப்பட்டதா?. அரசு தலையிட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்" இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.