Last Updated : 06 Oct, 2022 07:45 AM

 

Published : 06 Oct 2022 07:45 AM
Last Updated : 06 Oct 2022 07:45 AM

போலீஸாரின் உடல்நலனை கண்காணிக்க ரூ.46 லட்சத்தில் புதிய செல்போன் செயலி: 2 மாதங்களில் பயன்பாட்டுக்கு வருகிறது

சென்னை: குற்றச் செயல்களையும் முற்றிலும்தடுக்க காவல் துறை பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனால், சரியானதூக்கம், நேரத்துக்கு சாப்பாடு ஆகியவற்றையும் போலீஸாரால் சரிவர பின்பற்ற முடியவில்லை. இவற்றை கருத்தில் கொண்டு, போலீஸாரின் உடல் மற்றும் மனநலனை காக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி, காவலர்கள் முதல்தலைமைக் காவலர்கள் வரையிலானவர்களுக்கு வார ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இது உதவி ஆய்வாளர்களுக்கும் சமீபத்தில் விரிவுபடுத்தப்பட்டது.

காவலர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பயனடையும் வகையில், தமிழகம் முழுவதும் 13 இடங்களில் காவல் மருத்துவமனைகளும், 36 இடங்களில் புறநோயாளிகள் மருத்துவ சேவைமையங்களும் செயல்பட்டு வருகின்றன. மேலும், சென்னைகாவல் துறையில் மதுப்பழக்கத்துக்கு ஆளான, தொடர் விடுப்பில்உள்ளவர்கள், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டவர்களின் நல மேம்பாட்டுக்காக ‘மகிழ்ச்சி’ என்ற திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள காவலர் மருத்துவமனையில் சோதனை கூடங்கள் மட்டுமின்றி, அனைத்துபொது நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது போலீஸார் மட்டுமல்லாமல், அவர்களது வாழ்க்கைத்துணையும் இலவச வருடாந்திர மருத்துவப் பரிசோதனை செய்து கொள்கின்றனர். இந்நிலையில், இத்திட்டத்தைவிரிவுபடுத்தும் முயற்சியாக, சென்னை பெருநகர காவலில்பணிபுரியும் காவலர்களின் உடல்நலனை மென்பொருள் மூலம் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, போலீஸார் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தொடர்பான மருத்துவப் பதிவுகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு, மென்பொருளில் நிர்வகிக்கப்படும். இதன்மூலம் காவலர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் உடல்நலத்தை திறம்பட கண்காணிக்க இயலும். ரூ.46 லட்சத்தில் இதற்காக செல்போன் செயலி தயாராகி உள்ளது.

இன்னும் 2 மாதங்களில் இதுபயன்பாட்டுக்கு வர உள்ளது. இதுகுறித்து சென்னை பெருநகர காவல்ஆணையர் சங்கர் ஜிவால் கூறியதாவது: போலீஸாரின் நலனுக்காக பல்வேறு நலத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு வார ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. விடுப்பு வாங்க ‘விடுப்பு செயலி’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெண் காவலர்கள் மன ஆரோக்கியத்துடன் சிறப்பாக பணி செய்ய ‘ஆனந்தம்’ என்ற சிறப்பு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. காவலர் மருத்துவமனையில் ‘ஹெல்த் மேனஜ்மென்ட் சாப்ட்வேர்’(செயலி) கொண்டு வரப்பட உள்ளது. இதன்மூலம் சிகிச்சை பெறுவதற்கு, செல்போன் மூலமாகவே முன் அனுமதி பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x