தொழில்நுட்பத்தை மேம்படுத்த வசதியாக செயற்கைக் கோள்களின் ஆயுளை குறைக்க ஆய்வு: இஸ்ரோ துணை இயக்குநர் தகவல்

தொழில்நுட்பத்தை மேம்படுத்த வசதியாக செயற்கைக் கோள்களின் ஆயுளை குறைக்க ஆய்வு: இஸ்ரோ துணை இயக்குநர் தகவல்
Updated on
1 min read

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான 5 நாள் இன்ஸ்பையர் அறிவியல் முகாம், தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நேற்று தொடங்கியது. முகாமை தொடங்கிவைத்து இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன, மகேந்திரகிரி மைய துணை இயக்குநர் ஜே.ஆசீர் பாக்கியராஜ் பேசியதாவது:

இஸ்ரோ சார்பில் பல்வேறு ஆய் வுப் பணிகளுக்காக செயற்கைக் கோள்கள் அனுப்பப்படுகின்றன. பெரும்பாலும் அவற்றின் ஆயுட்காலம் 10 ஆண்டுகளாக உள்ளன. 10 ஆண்டுகள் ஆகும் போது அந்த செயற்கைக்கோள் பழைய தொழில்நுட்பம் கொண்ட தாக மாறிவிடுகிறது.

தற்போது தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. தினமும் தொழில்நுட்ப மேம்பாடு நடந்து வருகிறது. இந்த வளர்ச்சிக்கு ஏற்ப செயற்கைக் கோள்களின் தொழில்நுட்பத்தையும் மேம்படுத்த, அவற்றின் ஆயுட்காலத்தை குறைப்பது குறித்து ஆய்வுகள் நடந்து வருகின்றன என்றார்.

வரும் 29-ம் தேதி வரை நடைபெறும் முகாமில் 35 பள்ளிகளில் இருந்து 170 மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in