நிவாரணம் வழங்குவதில் பாகுபாடு காட்டப்படுவது நியாயமற்றது: அன்புமணி

அன்புமணி ராமதாஸ் | கோப்புப்படம்
அன்புமணி ராமதாஸ் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: "கடந்த ஜூலை மாதம் கொள்ளிடத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ஆற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த மூவரின் குடும்பத்திற்கும் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும்" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தஞ்சை மாவட்டம் பூண்டி அருகே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 6 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலும், அனுதாபங்களும். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டிருப்பது சரியான நடவடிக்கை.

இதே கொள்ளிடத்தில் கடந்த ஜூலை மாதம் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அணைக்கரை மதகு சாலையைச் சேர்ந்த ஆகாஷ், மனோஜ், ராஜேஷ் ஆகியோர் கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு, அடுத்த சில நாட்களில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.

உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று அப்போதே வலியுறுத்தியிருந்தேன். எனினும், அவர்களுக்கு எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை. ஆனால், இப்போது உயிரிழந்தவர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது.

உயிரிழப்புகளில் பாகுபாடு காட்டப்படுவது நியாயமற்றது. இந்தத் தவறுக்கு அதிகாரிகளின் அலட்சியம் காரணமா அல்லது வேறு காரணமா என்பது தெரியவில்லை. நடந்த தவறை சரி செய்யும் வகையில் ஜூலை மாதம் இறந்த மூவரின் குடும்பத்திற்கும் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in