“தமிழகத்தில் அக்.11 மனித சங்கிலிக்கு அனுமதி வழங்கினால்...” - ஹெச்.ராஜா எச்சரிக்கை

ஹெச்.ராஜா | கோப்புப் படம்
ஹெச்.ராஜா | கோப்புப் படம்
Updated on
1 min read

மதுரை: “தமிழகத்தில் அக்டோபர் 11-ல் திருமவாளவன் நடத்தும் மனித சங்கிலிக்கு அனுமதி வழங்கினால், விடுதலைப் புலிகளை ஆதரித்ததற்காக 1991ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டபோது போல் இப்போதும் நடைபெறும்” என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா எச்சரித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: "நாடு முழுவதும் பிஎஃப்ஐ மற்றும் அதனுடன் தொடர்புடைய இயக்கங்களும் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த இயக்கத்துக்கு ஆதரவாக பேசுவதும், செயல்படுவதும் சட்டப்படி குற்றமாகும். தமிழகத்தில் அக்.11-ல் திருமாவளவன், சீமானும் நடத்தவுள்ள மனித சங்கிலிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு அளித்ததால் 1991-ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டதை தமிழக முதல்வருக்கு நினைவூட்ட விரும்புகிறேன். மனித சங்கிலிக்கு அனுமதி வழங்கினால் 1991-ல் நடந்தது இப்போதும் நடைபெறும். திருமாவளவனும், சீமானும் கைது செய்யப்பட வேண்டும்.

புதுச்சேரியில் அக்.2-ல் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் அமைதியாக நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தும் போலீஸார் அனுமதி மறுத்தனர். தமிழக டிஜிபி, பிஎஃப்ஐ-க்கு ஆதரவாகவும், திருமாவளவனுக்கு சாதகமாகவும் பேசியது துரதிர்ஷடவசமானது. காவல் துறைக்கு தலைவராக இருக்க டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு தகுதி இல்லை.

ராஜராஜ சோழன் நூறு சதவீத இந்து பேராரசர். இந்தியாவின் பிறந்த அனைத்து மதங்களும் இந்து மதம் தான். சிவம், சைவம், வைணவம் என்பது வேறு வேறல்ல. அனைத்தும் இந்து மதம்தான். இதனால் அரசியலமைப்பு சட்டப்படியும், ஆதிசங்கரர் உருவாக்கிய வழிபாட்டு முறைப்படியும் ராஜராஜ சோழன் இந்து மகாராஜா தான்.

தமிழகத்தில் மாற்றம் வந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு தடை விதிக்கிறார்கள். தமிழகத்தில் நடைபெறும் இந்திய விரோத, தமிழ் விரோத ஆட்சிக்கு முடிவு கட்டப்படும். அதுவரை எங்களின் போராட்டம் தொடரு்ம்" என்று ஹெச்.ராஜா கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in