Published : 04 Oct 2022 01:51 PM
Last Updated : 04 Oct 2022 01:51 PM

மியான்மரில் சிக்கித் தவித்த 13 தமிழர்கள் இன்று தமிழகம் வருகை

சென்னை விமான நிலையம் | கோப்புப்படம்

சென்னை: மியான்மரில் சிக்கி தவித்த 13 தமிழர்கள் தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் இன்று தாயகம் திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தகவல்தொழில்நுட்ப பணிகளுக்காக தாய்லாந்திற்கு சென்ற 50 தமிழர்கள் மியான்மரில் ஆன்லைன் மோசடி கும்பலிடம் சிக்கித் தவித்தனர். தங்களை சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டினர். 50 தமிழர்கள் உள்பட 300 பேர் மியான்மரில் சிக்கித் தவித்தனர். மியான்மரில் சிக்கித் தவிக்கும் தங்களை மீட்க கோரி, அவர்கள் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. மியான்மரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சியினரும்
மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், மியான்மரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து மியான்மரில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுத்தது.

இதன்பயனாக, மியான்மரில் சிக்கித் தவித்த 14 பேர், தாய்லாந்தில் இருந்து இன்று விமானம் மூலம் சென்னை திரும்புகின்றனர். இதில் 13 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வெளியுறவுத்துறை மேற்கொண்ட முயற்சி காரணமாக முதற்கட்டமாக 13 பேர் இன்று தமிழகம் திரும்புகின்றனர்.

இந்த 13 பேரும் இன்றைக்குள் சென்னை விமான நிலையம் வந்தடைவார்கள் என்று கூறப்படுகிறது. எஞ்சியிருப்பவர்களை மீட்க வெளியுறவுத்துறை தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x