இரவு மாரத்தானில் உற்சாகத்துடன் ஓடிய ஓய்வுபெற்ற ‘தி இந்து’ நாளிதழ் உதவி ஆசிரியர்: ஆவடி காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டு

இரவு மாரத்தானில் உற்சாகத்துடன் ஓடிய ஓய்வுபெற்ற ‘தி இந்து’ நாளிதழ் உதவி ஆசிரியர்: ஆவடி காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டு
Updated on
1 min read

சென்னை: இரவு மாரத்தானில் உற்சாகமாக ஓடிய ‘தி இந்து’ நாளிதழின் ஓய்வுபெற்ற உதவி ஆசிரியர் ஆல்பர்ட் தேவகரத்தை ஆவடி காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டினார். சென்னை ரன்னர்ஸ், வேல் டெக், வேலம்மாள் நெக்ஸஸ் மற்றும் ஆவடி காவல் ஆணையரகம் ஆகியவை இணைந்து மக்களிடையே உடற்தகுதி மற்றும் நல்ல ஆரோக்கியத்தை வளர்ப்பதை நோக்கமாக வைத்து ‘போதைப் பொருள் இல்லா தமிழகத்துக்கான ஓட்டம்’ என்ற பெயரில் இரவு மாரத்தான் ஓட்டத்தை நேற்று முன்தினம் இரவு நடத்தியது. 21 கி.மீ., 10 கி.மீ., 5 கி.மீ. என தனித்தனியாக மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது. ஆவடி வேல்டெக் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் இருந்து மாரத்தான் ஓட்டம் தொடங்கியது. இதை டிஜிபி சைலேந்திர பாபு தொடங்கி வைத்தார். இந்த ஓட்டத்தில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிகோபாரை சேர்ந்தவர்கள் உட்பட சுமார் 3,500 பேர் ஆர்வமுடன் கலந்துகொண்டு ஓடினர்.

இதில், ‘தி இந்து’ நாளிதழின் ஓய்வுபெற்ற உதவி ஆசிரியர் ஆல்பர்ட் தேவகரம், 5 கி.மீ. மாரத்தானில் பங்கேற்றார். முதல் இரண்டரை கி.மீ. தொலைவை 30 நிமிடத்திலும், மீதி தொலைவை 25 நிமிடத்திலும் அவர் கடந்தார். 71 வயதிலும் அவர் உற்சாகமாக ஓடியது, அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. ஓட்டத்தின் முடிவில் அவரை ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அழைத்து பாராட்டினார். மாரத்தானில் ஓடியது குறித்து ஆல்பர்ட் தேவகரம் கூறும்போது, ‘‘வழக்கமாக 100 மற்றும் 200 மீட்டர் தூரத்தை இலக்காக வைத்து தினமும் ஓடுவேன். வயது மூப்புக்கு தகுந்தவாறு சிறு உடல்நலக் குறைவு உள்ளது. இருந்தாலும், எதையும் சாதிப்பதற்கு வயது ஒரு தடை அல்ல. உற்சாகமாக தினமும் உடற்பயிற்சி மேற்கொள்கிறேன். இதன்மூலம் புத்துணர்ச்சியை உணர்கிறேன். எனவே, அனைவரும் தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in