Last Updated : 10 Jul, 2014 12:00 AM

 

Published : 10 Jul 2014 12:00 AM
Last Updated : 10 Jul 2014 12:00 AM

ஆந்திர மாநிலம் பிரிப்பு பணிகள்: கிருஷ்ணா நதிநீர் திறப்பு தாமதமாகிறது

ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, அது தொடர்பான பணிகளில் உயர் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டிருப்பதால், சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறப்பது தாமதமாகிறது.

தெலுங்கு கங்கை ஒப்பந்தத்தின்படி, ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து சென்னை குடிநீர் தேவைக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சியும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும் கிருஷ்ணா நீர் திறந்துவிடப்பட வேண்டும்.

ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, அது தொடர்பான வேலைகளில் அந்த மாநில உயர் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், சென்னை குடிநீர் தேவைக்காக உடனடியாக தண்ணீர் திறந்துவிடும்படி நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுப்பதற்காக தமிழக பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகள் அண்மையில் திருப்பதி சென்றனர். அங்குள்ள பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் மாநில பிரிப்பு தொடர்பான பணியில் ஈடுபட்டிருந்ததால், அவருக்குப் பதிலாக கீழ்நிலையில் உள்ள அதிகாரிகளை பார்த்துவிட்டு திரும்பினர்.

இதையடுத்து, சென்னைக்கு விரைவில் கிருஷ்ணா நீர் திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக பொதுப் பணித்துறை முதன்மைச் செயலாளர் ஆந்திர மாநில பொதுப் பணித்துறை செயலாளருக்கு சில நாட்களுக்கு முன் கடிதம் எழுதியுள்ளார்.

“ஆந்திர மாநில பிரிப்பு தொடர்பான பணிகள் காரணமாக ஜூலை 1-ம் தேதி திறக்கப்பட வேண்டிய கிருஷ்ணா நீர், 9 நாட்கள் ஆகியும் திறக்கப்படவில்லை. மேலும் 10 நாட்கள் வரை தாமதமாகலாம்” என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

தென்மேற்கு பருவமழைக் காலத்தில்தான் ஆந்திராவில் உள்ள சைலம், சோமசீலா, கண்டலேறு ஆகிய அணைகள் நிரம்பும். இந்த ஆண்டு இதுவரை தென்மேற்குப் பருவமழை தீவிரமடையவில்லை. அதனால் 215 டிஎம்சி கொள்ளளவு கொண்ட சைலம் அணையில் தற்போது 54 டிஎம்சி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. அதுபோல 74 டிஎம்சி கொள்ளளவு கொண்ட சோமசீலா அணையில் 18 டிஎம்சி நீர் இருப்பும், 68 டிஎம்சி கொள்ளளவு கொண்ட கண்டலேறு அணையில் 15 டிஎம்சி நீர் இருப்பும் உள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், வீராணம் ஆகிய 5 ஏரிகளில் 2,392 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. இந்த நீரைக் கொண்டு சென்னை மாநகரின் இரண்டரை மாத குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யலாம். வரும் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கும். அதுவரை சென்னை குடிநீர் தேவைக்கு கிருஷ்ணா நீரைத்தான் நம்பியிருக்க வேண்டியுள்ளது. அதனால், கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு விரைவில் கிருஷ்ணா நீர் திறந்து விடுவதற்குத் தேவையான நடவடிக்கைகளில் தமிழக அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x