

காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த ரவியின் மகன் அபிஷேக் (9) மற்றும் முருகன் என்பவரின் மகன் ஜனார்தன் (9) ஆகியோர் கூடுவாஞ்சேரி அரசு நடுநிலைப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில், மாணவர்கள் இருவரும் வெள்ளிக்கிழமை பள்ளி வளாகத்தில் விளையாடியுள்ளனர்.
அப்போது, பள்ளி வளாகத்தையோட்டி அமைந்துள்ள மின்கம்பத்தின் ஸ்டே கம்பியை (மின்கம்பத்தை தாங்கும் கம்பி) பிடித்துள்ளனர். வியாழக்கிழமை இரவு வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக ஸ்டே கம்பியில் மின்சாரம் பாய்ந்திருந்தது. இதனால், ஸ்டே கம்பியை தொட்ட இரண்டு மாணவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டனர். இதில், பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து வந்த கூடுவாஞ்சேரி போலீஸார், உடல்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அரசு பள்ளியில் மின்சாரம் தாக்கி இரண்டு மாணவர்கள் இறந்த தகவல் அறிந்ததும், செங்கல்பட்டு கோட்டாட்சியர் தங்கராஜ் தலைமையில் கல்வித்துறை மற்றும் மின்சார வாரிய அதிகாரிகள் சம்பவம் நிகழ்ந்த பள்ளிக்குச் சென்று விபத்து குறித்து ஆய்வு செய்தனர்.
அப்போது, இறந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பள்ளி வளாகத்தில் கூடியதால், பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து, செங்கல்பட்டு கோட்டாட்சியர் தங்கராஜ் கூறுகையில், “விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டதில் பள்ளி நிர்வாகத்தின் மீது தவறு இல்லை என்பது தெரிந்தது. மேலும், வியாழக்கிழமை இரவு பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக மின்கம்பிகள், மின்கம்பத்தின் ஸ்டே கம்பியுடன் எதிர்பாராத விதமாக உரசியுள்ளன. இதில் மின்கம்பியுடன் ஸ்டே கம்பியும் இணைந்துள்ளது.
இதையறியாத மாணவர்கள் ஸ்டே கம்பியை தொட்டதால் அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டது. இறந்த மாணவர்களின் பெற்றோருக்கு நிவாரண உதவி அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், விபத்து ஏற்படுத்திய மின்கம்பத்தை இடம் மாற்றி அமைக்க வாய்ப்புள்ளதா என கண்டறியுமாறு மின்வாரியத்தை அறிவுறுத்தியுள்ளோம்” என்றார்.