Published : 02 Oct 2022 05:17 AM
Last Updated : 02 Oct 2022 05:17 AM

உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைகிறது - ஆதிச்சநல்லூரில் முதற்கட்ட அகழாய்வு பணி நிறைவு

தூத்துக்குடி: ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற முதற்கட்ட அகழாய்வுப் பணி நிறைவடைந்துள்ளது.

ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்தாண்டு அக்டோபரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வுப் பணி தொடங்கியது. இப்பணி 3 இடங்களில் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான முதுமக்கள் தாழிகள், இரும்பு, வெண்கலம், தங்கம், மண்பாண்டம் உட்பட பல பொருட்கள் கிடைத்தன.

உள்ளது உள்ளபடியே காட்சிப்படுத்தும் வகையில் இங்குள்ள பொருட்களை அப்படியே காட்சிப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த பணியில் திருச்சி மண்டல மத்திய தொல்லியல் துறை இயக்குநர் அருண்ராஜ் தலைமையில் ஆய்வாளர்கள் யத்தீஸ்குமார், முத்துகுமார், ராணிமோல் மற்றும் ஆய்வு மாணவர்கள் ஈடுபட்டு வந்தனர்.

உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணிக்காக இடம் தேர்வு செய்யப்பட்டது. இதற்காக ஆதிச்சநல்லூர் முன்னாள் ஊராட்சி தலைவர் சங்கர்கணேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் சார்பில் 5 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்பட்டது. ஆதிச்சநல்லூர் பரம்பை (மண் மேடு) சுற்றி 114 ஏக்கரில் இரும்பு வேலி அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இந்திய அளவிலான சிறப்பு வல்லுநர்கள் ஆதிச்சநல்லூர் வந்து, இங்கு கிடைத்த பொருட்களை சோதனையிட்டனர். மேலும், வெளிநாட்டில் உள்ள ஆதிச்சநல்லூர் பொருட்களை இங்கு கொண்டு வந்து காட்சிப்படுத்தவும் பணிகள் நடந்து வருகிறது.

ஆதிச்சநல்லூர் முதற்கட்ட அகழாய்வுப் பணி நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. இதற்கான விழா ஆதிச்சநல்லூர் பரம்பு மலையரசி அம்மன் கோயில் வளாகத்தில் நடந்தது. திருச்சி மத்திய தொல்லியல் துறை மண்டல இயக்குநர் அருண்ராஜ் தலைமை வகித்தார். வட்ட வழங்கல் அதிகாரி ஜெய்கிருஷ்ணன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, நல்லாசிரியர் சிவகளை மாணிக்கம், ஆதிச்சநல்லூர் முன்னாள் ஊராட்சி தலைவர் சங்கர் கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன், ஆதிச்சநல்லூரில் பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் ஊழியர்களை கவுரவித்தார்.

இதுகுறித்து திருச்சி மத்திய தொல்லியல் மண்டல இயக்குநர் அருண்ராஜ் கூறும்போது, “முதற்கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்கள் விரைவில் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை நடந்த அகழாய்வு சம்பந்தப்பட்ட பொருட்களை ஆவணப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெறும். இங்கு முற்கால மக்களின் வாழ்விடத்தை தேடி அகழாய்வுப் பணியை விரைவில் தொடங்க உள்ளோம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x