Published : 01 Oct 2022 09:49 AM
Last Updated : 01 Oct 2022 09:49 AM

கடம்பூர் பேரூராட்சி தேர்தலைக் கைப்பற்றியது திமுக கூட்டணி

வெற்றிச் சான்றிதழைப் பெறும் காங்கிரஸ் வேட்பாளர் ம. மாரீஸ்வரி.

கோவில்பட்டி: கடம்பூர் பேரூராட்சியில் நடந்த 9 வார்டுகளுக்கான தேர்தலில் 8 வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வெற்றி பெற்றுள்ளது.

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் உள்ள 1, 2, 11-வது வார்டுகளில் தலா ஒருவரது மனு மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. மீதமுள்ள 9 வார்டுகளில் 23 பேர் களத்தில் இருந்தனர். 1-வது வார்டு எஸ்.வி.எஸ்.பி.நாகராஜா, 2-வது வார்டு நா.ராஜேஸ்வரி, 11-வது வார்டு வெ.சிவக்குமார் ஆகியோர் மட்டுமே களத்தில் இருந்த நிலையில், அவர்கள் 3 பேரும் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படாததால் அவர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து கடம்பூர் பேரூராட்சியின் அனைத்து வார்டுகளுக்கும் தேர்தல் ரத்து என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில், 1, 2, 11-வது வார்டு சுயேச்சை வேட்பாளர்கள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கில், 1, 2, 11-வது வார்டுகளில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர்கள் நாகராஜா, ராஜேஸ்வரி, சிவக்குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்க வேண்டும். மற்ற 9 வார்டுகளுக்கும் ஏற்கெனவே மனுத்தாக்கல் செய்திருந்த அதே வேட்புமனுக்களை கொண்டு, 2 மாதங்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், கடம்பூர் பேரூராட்சி தேர்தல் செப்.29-ம் தேதி நடைபெறும் என கடந்த 21-ம் தேதி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. கடம்பூர் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட வழங்கல் அலுவலர் ஏ.எஸ்.அபுல்காசிம் நியமிக்கப்பட்டார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக தனசிங், ஜஸ்டின் செல்லதுரை ஆகியோர் செயல்படுகின்றனர். மேலும், கடந்த 21-ம் தேதி மாலையே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட எஸ்.வி.எஸ்.பி.நாகராஜா, நா.ராஜேஸ்வரி, வெ.சிவக்குமார் ஆகியோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கான தேர்தல் கடந்த 29-ம் தேதி நடந்தது. இதில், 9 வாக்குச்சாவடிகளில் 775 ஆண் வாக்காளர்களும், 823 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 1598 வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்திருந்தனர். இது 64.69 சதவீதமாகும்.

அதற்கான வாக்கு எண்ணிக்கை கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று (செப்.30) காலை நடந்தது. வாக்கு எண்ணும் மையத்தில் 2 மேஜைகள் அமைக்கப்பட்டிருந்தன. வாக்கு எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில் 3-வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மா.கனகமணி 122 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 4-வது வார்டில் திமுக வேட்பாளர் வை.தாழபுஷ்பம் 119 வாக்குகள் பெற்றும், 5-வது வார்டில் திமுக வேட்பாளர் மா.தமிழரசி 158 வாக்குகள் பெற்றும், 6-வது வார்டில் திமுக வேட்பாளர் சு. சரஸ்வதி 139 வாக்குகள் பெற்றும், 7-வது காங்கிரஸ் வேட்பாளர் ம. மாரீஸ்வரி 102 வாக்குகள் பெற்றும், 8-வது சார்பில் திமுக வேட்பாளர் தெ. செல்லத்துரை 132 வாக்குகள் பெற்றும், 9-வது வார்டில் திமுக வேட்பாளர் ஆ. ஜெயராஜ் 101 வாக்குகள் பெற்றும், 10-வது மதிமுக வேட்பாளர் பா. ரெங்கசாமி 123 வாக்குகள் பெற்றும், 12-வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் கா.முத்துமாரி 92 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர். தேர்தல் நடத்தப்பட்ட 9 வார்டுகளில், 8 வார்டுகளை திமுக மற்றும் கூட்டணி கட்சி கைப்பற்றியது. 12-வது வார்டில் மட்டும் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அக்.10-ம் தேதி பதவி ஏற்கின்றனர். இதைத் தொடர்ந்து 12-ம் தேதி காலை கடம்பூர் பேரூராட்சி மன்ற தலைவருக்கான மறைமுக தேர்தலும், மதியம் துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தலும் நடக்கின்றன.

அதிமுக, அமமுக பங்கேற்காத தேர்தல்

கடம்பூர் பேரூராட்சியில் திமுக கூட்டணியில் நேற்று நடந்த 9 வார்டுகளுக்கான தேர்தலில் திமுக 7 இடங்களிலும், காங்கிரஸ், மதிமுக தலா ஒரு இடத்தில் போட்டியிட்டன. பாஜக ஒரு இடத்தில் களம் கண்டது. சுயேச்சை வேட்பாளர் கு.ஜெயசித்ரா 5, 6-வது வார்டுகளில் போட்டியிட்டார். ஆனால், தொகுதியை தன்னிடம் வைத்துள்ள அதிமுகவும், கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்தை தன் வசம் வைத்துள்ள அமமுகவும் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x