காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்ட டாஸ்மாக் பார் உரிமத்துக்கான டெண்டர் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்ட டாஸ்மாக் பார் உரிமத்துக்கான டெண்டர் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

Published on

சென்னை: காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்ட டாஸ்மாக் பார் உரிமத்துக்கான டெண்டரை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் மதுபானக் கடைகளின் அருகில் தின்பண்டங்களை விற்பனை செய்யவும், காலி மதுபாட்டில்களை சேகரிக்கவும் பார் நடத்தும் உரிமத்துக்கான டெண்டரை வரவேற்று டாஸ்மாக் நிர்வாகம் கடந்த ஆக.2-ம்தேதி அறிவிப்பாணை வெளியிட்டிருந்தது.

தடை கோரி வழக்கு: தற்போது பார் உரிமம் பெற்று பார்களை நடத்தி வருபவர்கள், புதிதாக உரிமம் பெறும் நபர்களுக்கு அந்த இடத்தை வழங்க வேண்டும் என டாஸ்மாக் நிறுவனம் வற்புறுத்துவதாக கூறி,இந்த டெண்டர் அறிவிப்பாணைக்கு தடை கோரி காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 8மாவட்டங்களைச் சேர்ந்த பார்உரிமையாளர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

நிர்பந்திக்க முடியாது - ‘ஏற்கெனவே பார் உரிமம் பெற்று பார்களை நடத்தி வரும்தங்களுக்கும், டாஸ்மாக் நிர்வாகத்துக்கும் இடையே அந்த இடம் தொடர்பாக எந்த குத்தகை ஒப்பந்தமும் இல்லை. நில உரிமையாளர்களுடன் நாங்கள் ஒப்பந்தம் செய்துள்ளபோது, அந்த இடத்தை மூன்றாவது நபருக்கு வழங்க வேண்டும் என நிர்பந்திக்க முடியாது. எனவே எங்களுக்கான டெண்டர் உரிமத்தை நீட்டித்து வழங்க உத்தரவிட வேண்டும்’ என அவர்கள் கோரியிருந்தனர். இந்த வழக்கின் விசாரணை, நீதிபதி அனிதா சுமந்த் முன்பாக நடந்தது. அப்போது பார் உரிமையாளர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.சிங்காரவேலன் ஆஜராகி வாதிட்டார். அதையடுத்து காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் டாஸ்மாக் பார் உரிமத்துக்கான டெண்டர் அறிவிப்பாணையை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in