Published : 30 Sep 2022 12:42 PM
Last Updated : 30 Sep 2022 12:42 PM

திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிக்கு அக்.7-ல் வேட்புமனு தாக்கல்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பொதுச் செயலாளர் துரைமுருகன் | கோப்புப் படம்

சென்னை: திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிக்கு அக்டோபர் 7-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிக்கான தேர்தல் தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நடைபெற்று வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15-வது பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தகுதியுள்ள ஒன்றிய, நகர, நகரிய பேரூர், பகுதிக் கழகச் செயலாளர்கள், மாவட்ட, மாநகரக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் அடங்கிய புதிய பொதுக்குழுக் கூட்டம் 9-ம் தேதி, காலை 9 மணிக்கு சென்னை, அமைந்தகரை, பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும்.

அதுபோது திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் நான்கு தணிக்கைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறும். மேற்கண்ட பொறுப்புகளுக்காக வேட்புமனுக்கள் 7-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் தலைமைக் கழகத்தில் பெற்றுக் கொள்ளப்படும். இப்பொறுப்புகளுக்குப் போட்டியிடுவோர் வேட்புமனுக் கட்டணமாக ரூ.50,000 அளித்து ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.

தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் நான்கு தணிக்கைக் குழு உறுப்பினர்கள் ஆகிய பொறுப்புகளுக்கு போட்டியிடுவோர்களைப் பொதுக்குழு உறுப்பினர்கள் (தலைமைச் செயற்குழு உறுப்பினர் உட்பட) ஐவர் முன்மொழிய, ஐவர் வழி மொழிய வேண்டும். அனைத்து நடைமுறைகளிலும் கழகத் தேர்தல் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x