Published : 30 Sep 2022 12:17 PM
Last Updated : 30 Sep 2022 12:17 PM

புதிய செல்போன்கள் உற்பத்தி மையமாக தமிழகத்தை மாற்றும் நோக்கில் செயல்படுகிறோம்: முதல்வர் ஸ்டாலின் 

முதல்வர் ஸ்டாலின்

செங்கல்பட்டு: "தற்போது சீனாவில்தான் புதிய செல்போன் மாடல்கள் பெருமளவில் தயாரிக்கப்படுகின்றன. அதனைமாற்றி தமிழ்நாட்டையும் அத்தகைய உற்பத்தி மையமாக மாற்றிட வேண்டும் என்ற நோக்கோடு நாங்கள் செயல்பட்டு வருகிறோம்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

செங்கல்பட்டில் ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் பெகாட்ரானின் நவீன ஆலை திறப்பு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியது: " உயர் தொழில்நுட்பத் திட்டங்களையும், பெருமளவில் வேலைவாய்ப்பினை அளிக்கும் திட்டங்களையும் கொண்டுவர தமிழக அரசு பெரு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஒவ்வொரு துறையிலும், மதிப்புக்கூட்டு உற்பத்தியை மேற்கொள்ளும் திட்டங்களையும் பன்முகப்படுத்தும் முயற்சிகளையும் நாங்கள் வரவேற்கிறோம். இதுபோன்ற முயற்சியால்தான், அண்மையில் தமிழகத்தில் செமி கண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது சீனாவில்தான் புதிய செல்போன் மாடல்கள் பெருமளவில் தயாரிக்கப்படுகின்றன. அதனை மாற்றி தமிழ்நாட்டையும் அத்தகைய உற்பத்தி மையமாக மாற்றிட வேண்டும் என்ற நோக்கோடு நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

ஸ்மார்ட்போன்கள் உற்பத்திக்கான முழு விநியோக சங்கிலியையும் தமிழ்நாட்டிற்கு கொண்டுவரும் முயற்சிகளிலும் நாங்கள் மேற்கொண்டுள்ளோம். இத்தகைய நேரத்தில் பெகாட்ரான் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி திட்டம் இங்கு தொடங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்காக பெகாட்ரான் நிறுவனத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேநேரம் உங்களுடைய இரண்டாவது கட்ட உற்பத்தித் திட்டத்தையும் விரைவில் நீங்கள் இங்குதான் தொடங்கவேண்டும். தொடங்கப் போகிறீர்கள் என்பதையறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன். அரசுத் தரப்பில் அதற்காக நாங்கள் அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக இருக்கிறோம். மேலும் உங்கள் விரிவாக்கத் திட்டத்தையும், மின் உற்பத்தி திட்டங்களையும் தமிழகத்திலேயே தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x