

கடந்த அதிமுக ஆட்சியில் திண்டுக்கல் மலைக்கோட்டையை பசுமையாக்க மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாகவும், இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசனிடம் விசாரணை நடத்த வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம் தலைமையில் அக்கட்சியினர் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
இதற்கு மறுப்பு தெரிவித்து, தன் மீதான குற்றச்சாட்டில் உண்மையில்லை என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
மார்க்சிஸ்ட் கட்சியினர் கூறியதுபோல் திண்டுக்கல் மலைக்கோட்டையில் மரக்கன்று நடப்பட்டதில் எந்த ஊழலும் நடைபெறவில்லை. அவர்களது குற்றச்சாட்டில் எந்த முகாந்திரமும் இல்லை.
இதுபோன்று என்மீது வீண் பழி சுமத்தி பொது வாழ்க்கையில் இருந்து என்னை முடக்க முடியாது. இவர்கள் கூறும் குற்றச்சாட்டுகளில் எள்முனையளவும் உண்மையில்லை.
என்மீது அபாண்டமாக புகார் தெரிவித்த மார்க்சிஸ்ட் கட்சியினர் அரசியலில் இருந்து விலகி பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கூறினார்.