

அரசு கேபிள் நிறுவனத்துடன் இணைந்து பொதுமக்களுக்கு இணைய சேவை வழங்க விரும்புவோர் நவம்பர் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அந்நிறுவன மேலாண் இயக்குனர் ஜெ.குமரகுருபரன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் ஏற்கெனவே இணைய சேவை வழங்குவதற்கான உரிமத்தை பெற்றுள்ளது. இதைப் பயன்படுத்தி 'இல்லந்தோறும் இணையம்' கொள்கை அடிப்படையில், அதிவேக அகண்ட இணைய சேவையை முதல் கட்டமாக கடந்த மார்ச் மாதம் முதல் மாவட்ட தலைநகர்களில் வழஙகி வருகிறது.
இரண்டாம் கட்டமாக, இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நகராட்சி பகுதிகளிலும் விரிவுபடுத்துவதற்கான விருப்பம் கோரும் விண்ணப்பங்களை இந்நிறுவனத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து நவம்பர் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இத்திட்டத்தில் சேர்ந்து இணைய சேவை வழங்குவதற்கு இதுவரை 7 ஆயிரத்து 317 பேர் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துள்ளனர். இத்திட்டத்தில் சேர அதிகளவில் வரவேற்பு இருக்கிறது. மேலும், கால அவகாசத்தை நீட்டிக்குமாறு விருப்பமுள்ளவர்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இதையடுத்து, விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய கடைசி நாள் நவம்பர் 30-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
எனவே, இல்லந்தோறும் இணையம் திட்டத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு இணைய சேவை வழங்க விரும்புவோர் நவம்பர் 30-ம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டம் தொடர்பான அனைத்து தகவல்களும் கேள்வி- பதிலாக www.tactv.in என்ற இணையதளத்தில் அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் என்ற பகுதியில் நவம்பர் 14-ம் தேதி முதல் பார்த்து தெரிந்துகொள்ளலாம். மேலும் இது தொடர்பான சந்தேகங்களுக்கு 1800 425 2911 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொள்ளலாம்'' என்று அதில் கூறப்பட்டுள்ளது.