முதல்வர் குறித்து அவதூறு சுவரொட்டி: மன்னிப்புக் கோரிய இருவருக்கு நிபந்தனை முன்ஜாமீன்

முதல்வர் குறித்து அவதூறு சுவரொட்டி: மன்னிப்புக் கோரிய இருவருக்கு நிபந்தனை முன்ஜாமீன்
Updated on
1 min read

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அவதூறாக சித்தரித்து சுவரொட்டி ஒட்டிய விவகாரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த இருவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வடசென்னை பகுதியில் கடந்த 11-ம் தேதி முதல்வர் ஸ்டாலினை அவதூறாக சித்தரிக்கும் வகையில் சுவரொட்டி ஒட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக துறைமுகம் கிழக்கு பகுதி கிளை செயலாளர் ராஜசேகர் அளித்த புகாரில் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி மண்ணடியை சேர்ந்த ஆறுமுகம், ரமேஷ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது காவல் துறை தரப்பில் வழக்கறிஞர் வினோத் ராஜ் ஆஜராகி, இந்தப் புகாரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்தான் இந்த சுவரொட்டிகளுக்கு நிதி உதவி செய்தததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மேலும் இந்த விவகாரத்தில் பின்புலமாக உள்ளவர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மண்ணடியை சேர்ந்த ஆறுமுகம் மற்றும் ரமேஷ் ஆகியோர் இனிமேல் இதுபோன்ற செயலில் ஈடுபாடமாட்டோம் என்று நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர்.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, மூன்று வார காலம் மதுரையில் தங்கியிருந்து தல்லாகுளம் காவல் நிலையத்தில் இருவரும் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in