Published : 27 Sep 2022 04:05 AM
Last Updated : 27 Sep 2022 04:05 AM

சமயபுரம் காவல் நிலையத்தில் இளைஞர் மர்ம மரணம் - போலீஸார் தாக்கியதில் இறந்தாரா என விசாரணை

திருச்சி: செல்போன் திருட்டு தொடர்பாக சமயபுரம் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்தார். போலீஸார் தாக்கப்பட்டதால் அவர் உயிரிழந்தாரா என விசாரணை நடந்து வருகிறது.

அரியலூர் மாவட்டம் ஓரியூர் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் (37). நேற்று அதிகாலை சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தர்களிடம் செல்போன் திருடியதாக கூறி, கோயில் காவலாளிகள் இவரை பிடித்து சமயபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து, அங்கு உள்ள விசாரணைக் கைதி அறையில் இவரை அடைத்து வைத்து போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, காவல் நிலைய கழிப்பறைக்கு சென்ற அவர், அங்குள்ள ஜன்னலில் தூக்கில் சடலமாக தொங்கியது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர், மாவட்ட எஸ்.பி. சுஜித்குமார், லால்குடி சரக டிஎஸ்பி பரவாசுதேவன், மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் சக்திவேல் முருகன், வருவாய் ஆய்வாளர் திவ்யா, கிராம நிர்வாக அலுவலர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் அங்கு வந்தனர். விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட முருகானந்தம் உயிரிழந்தது குறித்து போலீஸாரிடம் விசாரணை நடத்தினர். அவரது உடலில் காயங்கள் எதுவும் உள்ளதா என்றும் ஆய்வு செய்தனர். பணியில் இருந்த போலீஸாரிடம் எஸ்.பி. சுஜித் குமார் தனித்தனியாகவும் விசாரணை நடத்தினார். பின்னர், பிரேதப் பரிசோதனைக்காக முருகானந்தம் உடல் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

செல்போன் திருடியதாக ஒப்படைக்கப்பட்ட முருகானந்தத்தை காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் விசாரித்துள்ளனர். மதுபோதைக்கு அடிமையான அவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மனைவி, குழந்தைகளை பிரிந்து வசித்து வந்துள்ளார். கடந்த 2021-ல் மது குடிக்க பணம் தராததால், தனது தாயை அடித்து கொலை செய்த வழக்கு, அரியலூர் மாவட்டம் கூத்தூர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. செல்போன் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட 7 வழக்குகளும் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், இப்பகுதியில் சமீபகாலமாக நடந்த வேறுசில திருட்டுகளில் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகித்து, அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர், இயற்கை உபாதை கழிப்பதற்காக காவல் நிலையத்தின் கழிப்பறைக்கு சென்ற முருகானந்தம் நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. சந்தேகமடைந்த காவலர் ஒருவர் சென்று பார்த்தபோது, தனது அரைஞாண் கயிற்றை பயன்படுத்தி, கழிப்பறை ஜன்னலில் அவர் தூக்கில் சடலமாக தொங்கியது தெரியவந்தது. விசாரணையில் மனமுடைந்து அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீஸ்தரப்பில் கூறப்படுகிறது.

அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், விசாரணை என்ற பெயரில் அவர் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் போலீஸ் அதிகாரிகளிடம் உறவினர்கள் புகார் அளித்தனர். மாஜிஸ்திரேட் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்ட பிறகு, உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படும். போலீஸார் தாக்கியதற்கான ஆதாரமாக உடல்களில் காயம் ஏதும் இருந்தால், போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சமயபுரம் காவல் நிலையத்தில் விசாரணையின்போது முருகன் என்ற விசாரணைக் கைதி உயிரிழந்தது குறித்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x