Published : 27 Sep 2022 07:30 AM
Last Updated : 27 Sep 2022 07:30 AM

டெல்டா பகுதிகள் உட்பட 23 மாவட்டங்களில் 2 நாள் கனமழை தொடர வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட 23 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செப்.27, 28 தேதிகளில் (இன்றும் நாளையும்) நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை தொடர வாய்ப்புள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். திங்கட்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்சி, தஞ்சாவூர் மாவட்டம் புட்லூரில் தலா 17 செ.மீ. தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் 15 செ.மீ. தஞ்சாவூர், வல்லம், நெய்வாசல் தென்பதி ஆகிய இடங்களில் தலா 12, திருச்சி பொன்மலையில் 11, திருச்சி விமான நிலையம், துவாக்குடி, மன்னார்குடி ஆகிய இடங்களில் தலா 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இலங்கைக்கு தெற்கே உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 28-ம் தேதியும், 29, 30 தேதிகளில் தென்மேற்கு வங்கக் கடலிலும் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x