

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்ச நல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் நடைபெறும் அகழாய்வில் வெண்கலத்தாலான நாய், மான், ஆடு உருவங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் மூன்று இடங்களை தேர்வு செய்து மத்திய தொல்லியல் துறைசார்பில் அகழாய்வு நடைபெற்று வருகிறது.
கடந்த ஓராண்டாக நடைபெற்று வரும் அகழாய்வில் இதுவரை 85-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், தங்க நெற்றிப்பட்டம் உட்பட பல பொருட்கள் கிடைத்துள்ளன.
தற்போது வெண்கலத்தாலான நாய், மான், ஆடு உருவங்கள், நீர்கோழி, மீன் பிடிக்க பயன்படும் தூண்டில் முள், மரத்தால் ஆன கைப்பிடி கொண்ட கத்தி, இரும்புவாள் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இது தொல்லியல் ஆய்வாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆதிச்சநல்லூரில் அகழாய் வுப் பணிகள் இந்த மாத இறுதியுடன் நிறைவு பெறும் எனகூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.