

திருநெல்வேலி மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் நீடிப்பதால்,துப்புரவு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மாநகராட்சியில் திருநெல்வேலி, தச்சநல்லூர், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் ஆகிய 4 மண்டலங்களிலும் 175 நிரந்தர தூய்மைப் பணியாளர்கள், 238 ஒப்பந்த பணியாளர்கள், 750 சுயஉதவிக் குழு பணியாளர்கள் தூய்மைப் பணி மேற்கொண்டு வருகின்றனர்.
மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களின் வருகையை செல்போன் செயலி மூலம் பதிவு செய்வதற்கான நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இதற்காக தூய்மைப் பணியாளர்கள் இடமாற்றம் செய்யப்படும் வாய்ப்புகள் உருவாகியிருக்கிறது.
இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்களை இடமாற்றம் செய்யக்கூடாது என்று வலியுறுத்தி 4 மண்டலங்களிலும் தூய்மைப் பணியாளர்கள் நேற்று 2-வது நாளாகபணிக்கு செல்லாமல் வேலைநிறுத்தம் செய்தனர்.
இதனால் மாநகரில் தூய்மைப் பணிகள் பாதிக்கப்பட்டன.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேயர் சரவணன், ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால், அதிகாரிகளின் சமரசத்தை தூய்மைப் பணியாளர்கள் ஏற்கவில்லை.