Last Updated : 26 Sep, 2022 06:39 PM

 

Published : 26 Sep 2022 06:39 PM
Last Updated : 26 Sep 2022 06:39 PM

கள்ளக்குறிச்சி | சத்துணவுக் கூடங்களில் வீட்டுப் பாத்திரங்களில் சமையல் - பரிதவிக்கும் பணியாளர்கள்

கள்ளக்குறிச்சி: சத்துணவுக் கூடங்களுக்கு தங்கள் வீடுகளிலிருந்து பாத்திரங்கள் எடுத்துவந்து சமையல் செய்யும் நிலையில், பாத்திரப் பற்றாக்குறையில் பணியாளர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் சத்துணவு மையங்களுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு வகைகள், எண்ணெய், கொண்டக் கடலை உள்ளிட்டவை தேவைக்கான அளவில் 50 சதவிகிதத்திற்கும் குறைவாகவே வழங்குவதால், மாணவர்களுக்கு உணவு வழங்குவதில் பல்வேறு சிக்கல்களை சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், உதவி சமையலர்கள் எதிர்கொண்டு வருவதாக அலுவலர்கள் கவலையோடு கூறுகின்றனர்.

ஒருங்கிணைந்த விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2426 சத்துணவு மையங்கள் மூலம் 295392 மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படுகிறது. இந்த சத்துணவு வழங்கும் பணியில் 1389 அமைப்பாளர்களும், 2006 சமையலர்களும், 1215 சமையல் உதவியாளர்களும் பணியில் உள்ளனர். இந்த இரு மாவட்டத்திலும் 1037 அமைப்பாளர்கள், 448 சமையலர்கள், 1239 சமையல் உதவியாளர் பணியிடகள் காலியாக உள்ளது.

சத்துணவுத் திட்டத்தில் மனிதத் திறன் குறைவாக உள்ள அதேநேரத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுக்கான பொருட்கள் விநியோகித்தலிலும் குறைபாடு நிலவுவதாக அமைப்பாளர்கள் புகார் கூறுகின்றனர். இந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு சமையல் பொருட்களான அரிசி, துவரம் பருப்பு, பாசி பருப்பு, எண்ணெய், உப்பு, முட்டை மற்றும் கொண்டை கடலை உள்ளிட்டவை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் சத்துணவு மையங்களுக்கு விநியோகிக்கப்படுகின்றனர். அவ்வாறு விநியோகிக்கப்படும் பொருட்களில் கொண்டை கடலை, உப்பு, பாசி பருப்பு எப்போதாவது ஒருமுறை தான் வரும். அரிசி, துவரம் பருப்பு எண்ணெய் தவறாமல் வழங்கினாலும், அவற்றின் எடை 50 சதவீதம் குறைவாக கொடுக்கப்படுகிறது.

குறிப்பாக, அரசி 50 கிலோவுக்கு 30 கிலோ தான் இருக்கும், ஆனால் முட்டை எண்ணிக்கை மட்டும் சரியாக இருக்கிறது என்கிறார் அமைப்பாளர் ஒருவர். இதைவிட பெரிய கொடுமை என்னவெனில் சமையல் பாத்திரங்கள் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. 160 மையங்களைக் கொண்ட ஒரு வட்டாரத்துக்கு 42 மையங்களுக்கான பாத்திரங்கள் மட்டுமே வழங்குகின்றனர். இதை வைத்து அவர்கள் எப்படி சமைப்பர் என்கின்றனர் சத்துணவு மேலாளர்கள்.

நிர்வாக ரீதியாக இவ்வுளவு குறைபாடுகள் உள்ளபோது, அவ்வப்போது ஆட்சியர், திட்ட அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர், எம்எல்ஏ என பலர் திடீர் விசிட் அடித்து, இதில் ஏன் குறையாக உள்ளது என கேள்வி எழுப்புவதோடு, எங்கள் மீது நடவடிக்கைக்கும் பரிந்துரைக்கின்றனர். இதனால் பல சமையலர்கள் தங்கள் பணி பாதுகாப்பைக் கருதில் வீட்டிலிருந்து பாத்திரங்கள் எடுத்து வந்து சமைக்கும் நிலைமையும் உள்ளது என்கின்றனர் அமைப்பாளர்கள்.

இது தொடர்பாக விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தின் சத்துணவுத்திட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சரவணபவ என்பவரிடம் கேட்டபோது, ''நடைமுறையில் உள்ள பிரச்சனைகள் குறித்து அமைப்பாளர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் அவர்கள் குறையை ஏற்க மறுக்கின்றனர். பாத்திரம் பிரச்சினை உள்ளது. புதிய பாத்திரங்கள் வழங்க மாநில அளவில் டெண்டர் கோரப்பட்டுள்ளது இரு மாதங்களில் அனைத்து மையங்களுக்கும் பாத்திரங்கள் குறைவின்றி வழங்கப்படும்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x