சென்னை மெரினா கடற்கரையில் இலவச வைஃபை விரைவில் அறிமுகம்

மெரினா கடற்கரை | கோப்புப் படம்
மெரினா கடற்கரை | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: மெரினா கடற்கரையில் இலவச வைஃபை சேவையை சென்னை மாநகராட்சி விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

சென்னை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 49 இடங்களில் ஸ்மார்ட் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட் கம்பங்கள் மூலம் பொதுமக்களுக்கு 30 நிமிடம் இலவச வைஃபை வழங்கப்படுகிறது. 15-வது மண்டலம் தவிர்த்து அனைத்து மண்டலங்களிலும் இந்த வசதி நடைமுறையில் உள்ளது. இதைத் தவிர்த்து சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இலவச வைஃபை வழங்கி வருகிறார்.

இந்நிலையில், சென்னை மெரினாவில் பொதுமக்களுக்கு இலவச இணைய சேவை வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகைளில், "மெரினா கடற்கரை தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் இடமாக உள்ளது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மெரினா கடற்கரையை மேம்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதன்படி பொதுமக்களுக்கு இலவச இணைய சேவை வழங்க முடிவு செய்யப்பட்டுளளது.

கலங்கரை விளக்கம் முதல் உழைப்பாளர் சிலை வரை ஐந்து இடங்களில் கம்பங்கள் நிறுவப்படவுள்ளன. தமிழ்நாடு சுற்றுலாத் துறை மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து இதை செயல்படுத்த உள்ளது" என்று அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in