Published : 26 Sep 2022 07:28 AM
Last Updated : 26 Sep 2022 07:28 AM

3.40 கோடி பேர் பூஸ்டர் தடுப்பூசி போடவில்லை: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

சென்னை

சென்னை: மத்திய அரசு அறிவித்தபடி, பூஸ்டர்டோஸ் தடுப்பூசியை இலவசமாக செலுத்தும் அவகாசம் வரும் 30-ம் தேதியுடன் முடிகிறது. தமிழகத்தில் இன்னும் 3.40 கோடி பேர் பூஸ்டர் தடுப்பூசி போடாமல் உள்ளனர் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் 38-வது மெகா கரோனா தடுப்பூசி முகாம் நேற்றுநடந்தது. சென்னை விருகம்பாக்கம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.

அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: முதல்வர் அறிவுறுத்தலின்படி, நாட்டிலேயே தமிழகத்தில்தான் தொடர்ச்சியாக மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 96.55 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 91.39 சதவீதம் பேர் 2-வது தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர். மத்திய அரசு அறிவித்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசி, 60 வயதை கடந்தவர்களுக்கு இலவசமாக போடப்படுகிறது.

18-59 வயதினர் தனியார் மருத்துவமனைகளில் ரூ.386.25 கட்டணம் செலுத்தி பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு75 நாட்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசம் என்று மத்திய அரசு அறிவித்தது. அந்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே வாரம்தோறும் மெகா முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் இந்த 75 நாள் அவகாசம் செப்.30-ம் தேதியுடன் முடிகிறது. இன்னும் 5 நாட்களுக்கு இலவசமாக செலுத்தப்படும். அதன்பிறகும், இலவசம் தொடருமா அல்லது, தனியார் மருத்துவமனைகளில்தான் கட்டணம் செலுத்தி போட்டுக்கொள்ள வேண்டுமா என்பது தெரியவில்லை. இதுபற்றிய அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகலாம்.

அக்.1-ம் தேதிக்கு பிறகு, ஒவ்வொரு புதன்கிழமையும் கரோனா தடுப்பூசி உட்பட 13 வகையான தடுப்பூசிகள் துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார சுகாதார நிலையங்கள், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் செலுத்தப்படும். வியாழக்கிழமை தோறும் பள்ளிகளில் 12-17 வயது மாணவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்படும்.

ஏராளமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தியும், வீடுகளுக்கு சென்று அறிவுறுத்தியும்கூட 20 சதவீதம் பேர் மட்டுமே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் போட தகுதியானவர்கள் 4.26 கோடி பேர். இதில் 86.32 லட்சம் மட்டும் பூஸ்டர் தடுப்பூசி போட்டுள்ளனர். இன்னும் 3.40 கோடி பேர் தடுப்பூசி போட வேண்டும் என்றார்.

விருகம்பாக்கம் எம்எல்ஏ பிரபாகர் ராஜா, சுகாதாரத் துறை செயலர் செந்தில்குமார், பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வவிநாயகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x