Last Updated : 26 Sep, 2022 06:57 AM

 

Published : 26 Sep 2022 06:57 AM
Last Updated : 26 Sep 2022 06:57 AM

ரவுடிகளை கண்காணிக்கும் ‘பருந்து’ செயலி: தமிழக காவல் துறையில் விரைவில் அறிமுகம்

சென்னை: குற்றச் செயல்களை முன்னரே கண்டறிந்து தடுக்கும் வகையிலும், ரவுடிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில் தமிழக காவல் துறையில் ‘பருந்து’ என்ற செயலி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. எனினும், கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, கடத்தல், கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட குற்றங்கள் தொடர்ந்து நடக்கின்றன. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 220 ஆதாயக் கொலைகள், 352 கூட்டுக் கொள்ளைகள் நடைபெற்றுள்ளன. இதேபோல, 2019 முதல் 2021 வரை 3 ஆண்டுகளில் 4,872 கொலைகள், 7,017 வழிப்பறிகள் மற்றும் திருட்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கடத்தல், தீ வைத்தல் உள்ளிட்ட குற்றங்கள் நடைபெற்றுள்ளன.

குற்றங்களைத் தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அவ்வப்போது ரவுடிகள் விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2012-ம் ஆண்டு நிலவரப்படி தமிழகம் முழுவதும் 16,502 ரவுடிகள் இருந்தனர். தலைநகர் சென்னையில் மட்டும் 3,175 ரவுடிகள் இருந்தனர். ரவுடிகளை ஒழிக்க, அவர்களை ஏ, ஏ-பிளஸ், பி, பி-பிளஸ் என பல்வேறு பிரிவுகளாகப் பிரித்து அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், மக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ரவுடிகள், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள், ஜாமீனில் வெளியே வந்த கொலைக் குற்றவாளிகளை கண்காணிக்க ‘பருந்து’ என்ற செயலியை தமிழக காவல் துறை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

இதுகுறித்து, காவல் துறையின் தொழில்நுட்பப் பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளின் தற்போதைய நிலையை அறியவும், அவர்களின் குற்றச் செயல்கள், பழிக்குப் பழி கொலைகள் மற்றும் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுபவர்களின் நடத்தையைக் கண்காணித்து, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் ‘பருந்து’ செயலி உதவும். மேலும், ரவுடிகள் மற்றும் கொலைக் குற்றவாளிகள் தலைமறைவாக இருந்தால், அவர்களுக்கு எதிரான பிடியாணைகளை நிறைவேற்றவும், நிலுவை வழக்குகளை கண்காணிக்கவும் பருந்து செயலி உதவும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

ரவுடிகளின் பெயர், இருப்பிடம், குற்ற வழக்குகள், அவர்களின் கூட்டாளிகள், குடும்ப பின்னணி, அவரது குடும்பத்தில் வேறு யாரேனும் ரவுடிகளாக உள்ளார்களா, எத்தனை முறை சிறை சென்றுள்ளார் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் புதிய செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, கண்காணிக்கப்பட உள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x