Published : 25 Sep 2022 02:15 PM
Last Updated : 25 Sep 2022 02:15 PM

பட்டியலின பெண் ஊராட்சி மன்றத் தலைவர் சாதிய பாகுபாடு புகார்: ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்

ஊராட்சி மன்ற அலுவலகம்

கரூர்: பட்டியலின பெண் ஊராட்சி தலைவர் சாதிய பாகுபாடு புகார் அளித்தது தொடர்பாக வார்டு உறுப்பினர், முன்னாள் தலைவர், செயலாளர் உள்ளிட்ட 4 பேர் மீது வாங்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

கரூர் மாவட்டம் கரூர் ஊராட்சி ஒன்றியம் நன்னியூர் ஊராட்சி மன்றத் தலைவர் மு.சுதா (30). பட்டியலினத்தைச் சேர்ந்தவர். துணைத்தலைவர் ஆர்.ஜோதிமணி மற்றும் 8 வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 10 பேர் உள்ளனர். ஊராட்சி மன்றத்தலைவர் சுதா மீது சாதிய ரீதியான பாகுபாடு காட்டப்படுவதாக வந்த புகாரின்பேரில் நன்னியூர் ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் சுதாவிடம் கடந்த 22ம் தேதி மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் விசாரணை நடத்தினார்.

இதையடுத்து வாங்கல் போலீஸில் கடந்த 22ம் தேதி சுதா, ஊராட்சி மன்றத்லைவராக உள்ள தனது கடமையை செய்யவிடாமல் 9வது வார்டு உறுப்பினர் நல்லசாமி (அதிமுக) குறுக்கீடு செய்து, மன உளைச்சலை ஏற்படுத்தியும், சாதி ரீதியான பாகுபாடுகளை செய்து வருவதாகவும, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் குமாரசாமி (திமுக) ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு அடிக்கடி வந்து அலுவலகப் பணியை செய்வதில் இடையூறு ஏற்படுத்தி வருவதாகவும்,

ஊராட்சி செயலாளர் நளினி அலுவலகப் பணியில் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. மேலும் 100 நாள் பொறுப்பாளரான அவர் கணவர் மூர்த்தி தேவையில்லாமல் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குள் வந்து கம்ப்யூட்டர் ஆபரேட்டர் என்று கூறிக்கொண்டு சம்பளம் தருமாறு கேட்டு வருவதாகவும், ஊராட்சி கூட்டங்கள் நடத்தும்போது கிண்டலடித்து, தொந்தரவு செய்து பணி செய்யவிடாமல் தடுத்து, ஜாதி பெயரை சொல்லி அழைப்பதாகவும், சம்பந்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த நபர்களின் மீது நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்திருந்தார்.

இதையடுத்து தொடர்ந்து ஊரக வளர்ச்சி அலுவலர் (தணிக்கை) லீலாகுமார் மற்றும் கரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) விஜயலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் நன்னியூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர் சுதாவிடம் நேற்று முன்தினம் நேரில் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து வாங்கல் காவல் நிலையத்திற்கு சுதாவை அழைத்த சென்று இன்ஸ்பெக்டர் உதயகுமார் முன்னிலையில் விஜயலட்சுமி விசாரணை நடத்தினார்.

புகாரின்பேரில் ஊராட்சி 9வது வார்டு உறுப்பினர் நல்லசாமி (40), ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் குமாரசாமி (58). நன்னியூர் ஊராட்சி செயலாளர் நளினி (38), 100 நாள் வேலை பொறுப்பாளர் மூர்த்தி (42) ஆகியோர் மீது ஆபாசமாக திட்டுதல், பெண் வன்கொடுமை, மற்றும் பட்டியலின, பட்டியல் பழங்குடியின வன்கொடுமை சட்டத்தின் கீழ் வாங்கல் போலீஸார் நேற்று வழக்கு பதிவு தலைமறைவான 4 பேரை தேடி வருகின்றனர். இந்நிலையில் ஊராட்சி செயலாளர் நளினியை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பணியிடை நீக்கம் செய்து நேற்று உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x