Published : 25 Sep 2022 01:18 PM
Last Updated : 25 Sep 2022 01:18 PM

மதக் கலவரங்களை ஏற்படுத்தத் திட்டமிடும் மதவாத சக்திகளை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவும்: சீமான் 

சீமான் | கோப்புப்படம்

சென்னை: "வருகிற நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு பெரும் மதக்கலவரத்தை தமிழகத்தில் ஏற்படுத்தத் திட்டமிட்டு வரும் இந்துத்துவக் கும்பலின் சதிச் செயல்களுக்கு இரையாகாது, தமிழக அரசு விழிப்போடு செயல்பட்டு சமூக அமைதியையும், மத நல்லிணக்கத்தையும் நிலைநாட்ட வேண்டியது அரசின் தார்மீகப் பொறுப்பும்,கடமையுமாகும்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "நாடெங்கிலும் மதப்பூசல்கள் ஏற்பட்டபோதுகூட அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த தமிழகத்தில் மதக்கலவரங்களை ஏற்படுத்துவதற்கென இந்துத்துவ இயக்கங்கள் செய்யும் பிரித்தாளும் சூழ்ச்சிகள் பெரும் அதிர்ச்சியைத் தருகின்றன. ஒருபுறம், இஸ்லாமிய இயக்கங்களைக் குறிவைத்து, தேசியப் புலனாய்வு முகாமையும், அமலாக்கத்துறையும் விசாரணை, கைது என அதிகாரப் பலத்தின் மூலம் வேட்டையாடிக் கொண்டிருக்க, மறுபுறம், மாநிலம் முழுமைக்கும் 50 இடங்களில் ஊர்வலம் நடத்துவதற்கு ஆர்எஸ்எஸ் இயக்கம் தயாராகிக் கொண்டிருப்பது திட்டமிடப்பட்டச் சதியின் செயல்பாட்டு வடிவமேயாகும்.

திமுக அரசு, உயர் நீதிமன்றத்தில் வலுவான வாதங்களை வைக்காதுவிட்டதன் விளைவாகவே, ஆர்எஸ்எஸ்ஸின் பேரணிக்கு அனுமதி பெறப்பட்டிருக்கிறது என்பது உறுதியாகியிருக்கும் நிலையில், மதவாதத்தை எதிர்ப்பதாகப் பேச்சளவில் மட்டும் கூறிக்கொண்டு, ஆட்சி நிர்வாகம், சட்டப்போராட்டமென செயல்பாட்டளவில் பாஜகவோடு இணங்கிப்போகும் திமுக அரசின் பாதகச்செயல் பச்சை சந்தர்ப்பவாதமாகும்.

தென் மாநிலங்களே தங்களது இலக்கென பாஜகவின் தலைவர் பெருமக்கள் கூறி வரும் நிலையில், அதற்கு அடித்தளமிடும் வகையில் தமிழகத்தில் மதமோதல்களையும், கும்பல் வன்முறைகளையும் ஏற்படுத்த இந்துத்துவ இயக்கங்கள் முயற்சிக்கிறதோ? எனும் ஐயம் வலுக்கிறது. ஆங்காங்கே, ஆர்எஸ்எஸ், பாஜக நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகவும், வாகனம் எரிக்கப்பட்டதாகவும் வருகிற செய்திகள் கடந்த காலத்தையே நினைவூட்டுகின்றன. தாங்களே தங்களது வீடுகளில் பெட்ரோல் குண்டை வீசி, தங்களது வாகனத்தை எரித்து அரசியல் லாபமீட்ட முயன்ற பாஜகவின் நிர்வாகிகளது முந்தைய செயல்பாடுகள் யாவும் சமகால சான்றுகளாக இருக்க, அதன் தொடர்ச்சியாக இதுவும் இருக்கலாம் எனும் வாதத்தில் உண்மையில்லாமல் இல்லை.

வருகிற நாடாளுமன்றத் தேர்தலை மனதில்கொண்டு பெரும் மதக்கலவரத்தை தமிழகத்தில் ஏற்படுத்தத் திட்டமிட்டு வரும் இந்துத்துவக் கும்பலின் சதிச் செயல்களுக்கு இரையாகாது, தமிழக அரசு விழிப்போடு செயல்பட்டு சமூக அமைதியையும், மத நல்லிணக்கத்தையும் நிலைநாட்ட வேண்டியது அரசின் தார்மீகப் பொறுப்பும்,கடமையுமாகும்.

ஆகவே, இவ்விவகாரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சிறப்புக் கவனம் செலுத்தி, மதப்பிளவுகளும், வன்முறைச் செயல்களும் நடைபெறாவண்ணம் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் துரிதப்படுத்த வேண்டுமெனவும், தமிழகத்தில் மதக்கலவரங்களை ஏற்படுத்தத் திட்டமிடும் மதவாத சக்திகளை உடனடியாக கடும் நடவடிக்கைகள் எடுத்து ஒடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x