அறக்கட்டளையை மத நிறுவனமாக அறிவிக்க அறநிலையத் துறை உதவி ஆணையருக்கு அதிகாரமில்லை: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

அறக்கட்டளையை மத நிறுவனமாக அறிவிக்க அறநிலையத் துறை உதவி ஆணையருக்கு அதிகாரமில்லை: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
Updated on
1 min read

சென்னை முகப்பேரில் உள்ள சந்தான சீனிவாச பெருமாள் கோயிலை ஸ்ரீ சந்தான சீனிவாச பெருமாள் பொது அறக்கட்டளை நிர்வகிப்பதால் அதை மத நிறுவனமாக அறிவித்தும், கோயிலுக்கு தக்காரை நியமித்தும் அறநிலையத் துறை உதவி ஆணையர் கடந்த 2015-ல் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பாக நடந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், இந்து சமய அறநிலையத் துறை சட்டப்படி அறக்கட்டளையை மத நிறுவனமாக அறிவிக்க உதவி ஆணையருக்கு அதிகாரமில்லை என்றும், இணை ஆணையருக்கும், துணை ஆணையருக்கும் மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும் வாதிடப் பட்டது.

அரசு தரப்பில், அந்த கோயிலில் 9 மாதங்களில் ரூ.1 கோடியே35 லட்சம் வருமானம் கிட்டியுள்ள நிலையில், வெறும் ரூ.43 ஆயிரம் மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும்,

கோயில் வருமானம்அறக்கட்டளையின் பெயரில் வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த முறைகேடுகள் காரணமாகவே அந்தஅறக்கட்டளையை மத நிறுவனமாக அறிவித்ததாகவும், அதற்கு உதவி ஆணையருக்கு அதிகாரம் உள்ளதாகவும் வாதிடப்பட்டது.

விதிகளை பின்பற்றி விசாரணை: இதைத் தொடர்ந்து, சட்டப்படி ஒரு அறக்கட்டளையை மத நிறுவனமாக அறிவிக்க இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையருக்கும், துணை ஆணையருக்கும் மட்டுமே அதிகாரம் உள்ளது.

உதவி ஆணையருக்கு அந்த அதிகாரம் இல்லை எனக்கூறி, இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், மனுதாரரின் அறக்கட்டளை மத நிறுவனமா, இல்லையா என்பதை விதிகளைப் பின்பற்றி விசாரணை நடத்தி 4 மாதங்களில் தீர்வு காண வேண்டும் என அறநிலையத் துறை இணை ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in