Published : 24 Sep 2022 04:55 PM
Last Updated : 24 Sep 2022 04:55 PM

மணலியில் 0% - சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 71% மட்டுமே நிறைவு

சென்னையில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணியை மேற்கொள்ளும் பணியாளர்கள்

சென்னை: சென்னையில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணிகள் இதுவரை 71 சதவீதம் மட்டுமே நிறைவு பெற்றுள்ளது.

சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்கு முன்பு கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்படும். இதன்படி இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக, நீர்நிலைகளில் தேங்கியுள்ள வண்டல்கள் மற்றும் ஆகாயத்தாமரைகள், நிலத்திலும் இயங்கக்கூடிய ரொபாடிக் எக்ஸ்கவேட்டர், ஆம்பிபியன் போன்ற நவீன இயந்திரங்கள் பயன்படுத்தி அகற்றப்பட்டு வருகிறது. இதன்படி ஆறுகள், ஏரிகள் மற்றும் நீர்வழிக் கால்வாய்கள் போன்ற நீர்நிலைகளில் 23 நீர்நிலைகளில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு தூர்வாரும் பணிகளின் மூலம் 4,775 மெட்ரிக் டன் அளவிலான வண்டல்கள் மற்றும் ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டுள்ளன. குறிப்பாக, மாம்பலம் கால்வாயில் இதுவரை 750 மெட்ரிக் டன் வண்டல்கள் மற்றும் கழிவுகள் தூர்வாரி அகற்றப்பட்டுள்ளது.

இதைத் தவிர்த்து மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணியும் நடைபெற்று வருகிறது. இதன்படி இந்தாண்டு பருவமழைக்கு முன்பாக 1356 கி.மீ நீளமுள்ள கால்வாய்களை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் மொத்தம் 1356.535 கி.மீ நீளமுள்ள கால்வாய்களை தூர் வார முடிவு செய்யப்பட்டு தற்போது வரை 972.505 கி.மீ நீளமுள்ள கால்வாய்கள் மட்டுமே தூர் வாரப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் 71 சதவீத கால்வாய்கள் மட்டுமே தூர் வாரப்பட்டுள்ளது.

இதுவரை திருவொற்றியூரில் 83 சதவீதம், மாதவரத்தில் 24 சதவீதம், தண்டையார்பேட்டையில் 33 சதவீதம், ராயபுரத்தில் 81 சதவீதம், திரு.வி.க.நகரில் 83 சதவீதம், அம்பத்தூரில் 48 சதவீதம், அண்ணா நகரில் 66 சதவீதம், தேனாம்பேடையில் 82 சதவீதம், கோடம்பாக்கத்தில் 81 சதவீதம், வளசரவாக்கத்தில் 82 சதவீதம், ஆலந்தூரில் 67 சதவீதம், அடையாற்றில் 79 சதவீதம், பெருங்குடியில் 79 சதவீதம், சோழிங்கநல்லூரில் 97 சதவீதம் தூர்வாரும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

குறிப்பாக, மணலி மண்டலத்தில் மொத்தம் 19 கி.மீ நீள மழைநீர் வடிகால் தூர்வார முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை ஒரு மீட்டர் நீளம் கூட தூர்வாரப்படவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x