சுவாதி கொலை | ரயில்வே நிர்வாகத்திடம் ரூ.3 கோடி இழப்பீடு கோரிய மனு தள்ளுபடி 

சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதியின் பெற்றோர், ரயில்வே நிர்வாகத்திடம் 3 கோடி ரூபாய் இழப்பீடு கோரி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் ராயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் கடந்த 2016-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக ராம்குமார் என்ற இளைஞரை காவல்துறை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து ராம்குமார் மின்சார ஒயரை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தங்களின் மகள் சுவாதி இறப்பிற்கு உரிய இழப்பீடு வழங்க கோரி சுவாதியின் தாய் ரங்கநாயகி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், "ரயில்வே நிர்வாகம் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையின் அலட்சியம் காரணமாகவே சுவாதி கொலை செய்யப்பட்டார். எனவே ரயில்வே நிர்வாகம் தரப்பில் இழப்பீடாக 3 கோடி ரூபாய் வழங்க வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்ரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ரயில்வே துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் ஆனந்த், "பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் உரிய பாதுகாப்பு வழங்கி வருகிறது. சுவாதி கொலை திட்டமிட்ட சம்பவம்" என்றும் கூறினார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இழப்பீடு கோரி உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யலாம் என்று அறிவுறுத்தி, இழப்பீடு கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in