Published : 03 Nov 2016 09:55 AM
Last Updated : 03 Nov 2016 09:55 AM

மரக்காணம் கலவரம்: நீதி விசாரணை கோரிய வழக்கு முடித்து வைப்பு

மரக்காணம் கலவரம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தக்கோரி பாமக தலைவர் ஜி.கே.மணி தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று முடித்து வைத்து உத்தரவிட்டது.

கடந்த 2013 ஏப்ரல் 25-ம் தேதி மாமல்லபுரத்தில் வன்னியர் சங்கம் சார்பாக சித்திரைத் திருவிழா நடத்தப்பட்டது. இதில் பங்கேற்க வந்த பாமகவினர் மீது மரக்காணம் அருகில் கட்டையன் தெரு பகுதியில் சிலர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்து இரு தரப்பினரி டையே கலவரம் ஏற்பட்டது. இதில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர்.

இதைக் கண்டித்து விழுப்புரத் தில் பாமகவினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பாமகவினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், மரக்காணம் கலவரம் மற்றும் அதன் தொடர்ச்சியான கைது குறித்து உண்மைகளை அறியும் வகையில் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தக் கோரியும், பாதிக்கப் பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் பாமக தலைவர் ஜி.கே.மணி கடந்த 2013-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதியைக் கொண்ட முதல் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாமக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘நீதி விசாரணை தொடர்பான கோரிக்கையை தற்போது வலியுறுத்தவில்லை. ஆனால், கலவரத்தை தடுக்கத் தவறிய போலீஸார், அதன்பிறகு நடந்த கைது நடவடிக்கைகளில் மட்டும் அதிகார துஷ்பிரயோகம் செய்துள் ளனர். கைது நடவடிக்கை களின்போது பின்பற்ற வேண்டிய எந்த விதிமுறைகளையும் அவர் கள் முறையாக பின்பற்றவில்லை’’ என வாதிட்டார்.

அதையடுத்து மனு மீதான விசாரணையை முடித்து வைப்பதாக கூறிய நீதிபதிகள், ‘‘கைது நடவடிக்கைகளின்போது தேசிய மனித உரிமை ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளை போலீஸார் முறையாக பின்பற்ற உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்’’ என டிஜிபிக்கு உத்தரவிட்டனர். பொதுமக்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால் போலீஸார் தலையிட வேண்டிய அவசியமே இருக்காது. அதுபோல அரசியல் கட்சிகளுக்கும் சமூக பொறுப் புணர்வு உள்ளது. எல்லோரும் அதை உணர்ந்து செயல்பட்டு இருந்தால் இந்த சம்பவமே நடந்திருக்காது எனவும் தங்களது உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x