Published : 21 Sep 2022 06:28 PM
Last Updated : 21 Sep 2022 06:28 PM

தமிழகத்தில் 448 சதுர கி.மீ பரப்பளவில் அமைகிறது இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பகம்

பிரதிநிதித்துவப் படம்

சென்னை: 448 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பகத்தை தமிழகத்தில் அமைத்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இந்தியாவில் கடற்பசு இனங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், வாழ்விட இழப்பு காரணமாக கடற்பசு இனங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது. தற்போது சுமார் 240 கடற்பசுக்கள் மட்டுமே இருப்பதாக தெரியவந்துள்ளது. பெரும்பான்மையான கடற்பசுக்கள் தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளில் (பாக்விரிகுடா) காணப்படுகின்றன.

இதனைத் தொடர்ந்து இவற்றை பாதுகாக்க பாக்விரிகுடாவில் “கடற்பசு பாதுகாப்பகம்” அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதன்படி தமிழக சட்டப்பேரவையில், தமிழகத்தில் அழிந்துவரும் நிலையில் உள்ள மிக அரிதான கடற்பசு இனத்தையும் அதன் கடல் வாழ்விடங்களையும் பாதுகாக்கும் பொருட்டு மன்னார்வளைகுடா, பாக்விரிகுடா பகுதியில் “கடற்பசு பாதுகாப்பகம்“ அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.

இதனைத் செயல்படுத்தும் விதமாக தமிழக அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையின்படி 448 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளை உள்ளடக்கிய பாக்விரிகுடா கடற்பசு பாதுகாப்பகமாக (Dugong Conservation Reserve) அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் எந்த ஒரு புதிய கட்டுப்பாடுகளோ நிபந்தனைகளோ அங்கு வாழும் மீனவ மக்களுக்கு விதிக்கப்படாது. பாக்வளைகுடாவில், தமிழக அரசு அறிவித்துள்ள இந்தக் கடற்பசு பாதுகாப்பகம், இந்தியாவிலேயே முதன்முதலாக அமைக்கப்படும் பாதுகாப்பகம் எனும் பெருமையை பெற்றுள்ளது.

பாக்விரிகுடாவை ஒட்டிய மீனவ மக்கள் கடற்பசுக்களை பாதுகாப்பதன் அவசியத்தைப் புரிந்து கொண்டு, பலமுறை மீன்பிடி வலையில் சிக்கிய கடற்பசுக்களை மீண்டும் கடலில் விட்டுள்ளனர். இதனைப் பாராட்டி தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு அரசு சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

கடற்பசு என்றால் என்ன?

உலகின் மிகப்பெரிய தாவரவகை கடல் பாலூட்டிகளான, கடற்பசுக்கள் (Dugong), முதன்மையாக கடற்புற்களை உண்டு வளர்ந்து வருகின்றன. கடற்பசு இனங்களை பாதுகாப்பதனால், கடல் பகுதிகளுக்கு அடியில் உள்ள கடற்புற்களை பாதுகாக்கவும், மேம்படுத்தவும், வளிமண்டல கார்பனை அதிக அளவில் நிலைப்படுத்தவும் உதவுகிறது. கடல்புல் படுகைகள் வணிகரீதியாக மதிப்புமிக்க பல மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு இனப்பெருக்கம் செய்ய ஏதுவாகவும், உணவளிக்கும் இடமாகவும் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x