‘மாமனிதன் வைகோ’ ஆவணப்படத்தை தயாரித்தது ஏன்? - துரை வைகோ அடுக்கிய 3 காரணங்கள்

துரை வைகோ
துரை வைகோ
Updated on
2 min read

மதுரை: “வைகோவின் ‘மாமனிதன்’ வரலாற்று ஆவணத் திரைப்படத்தை மூன்று முக்கியக் காரணங்களுக்காக தயாரித்தேன்” என்று அவரது மகன் துரை வைகோ விளக்கம் அளித்துள்ளார்.

மதிமுக சார்பில் ‘மாமனிதன் வைகோ’ வரலாற்று ஆவணத் திரைப்படம் வெளியிட்டு விழா மதுரை அண்ணாநகர் சினிப்பிரியா திரையரங்கத்தில் நடந்தது. வைகோவின் 56 ஆண்டு அரசியல் பயணயத்தை விளக்கியது. இந்தி எதிர்ப்பு போராட்டம் முதல் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் மீட்டெடுப்பு, காவிரி நதி நீர் உரிமை பாதுகாப்பு பேரணி, ஈழத் தமிழர்களுக்கான உரிமைப் போராட்டம், அணு உலை எதிர்ப்பு, முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு, சீமை கருவேல மரம் அகற்றம், மீத்தேன், ஷேல் கேஸ், ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு, நியூட்ரினோ தடை, ஸ்டெர்லைட் தடை, மூவர் தூக்குக்கு தடை, மதுவிலக்கு நடைபயணம் உள்ளிட்ட அவரது அரசியல் போராட்டங்கள், நீதிமன்ற வழக்குகள் போன்றவை இந்த ஆவணப் படத்தில் இடம்பெற்றது. மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ ஆவணத் திரைப்படத்தை வெளியிட்டு பேசினார்.

அவர் பேசியது: “இந்தத் திரைப்படம் திரையிடுவதற்கு தெற்கு தொகுதி எம்எல்ஏ பூமிநாதன் மற்றும் கட்சித் தொண்டர்கள்தான் முக்கிய காரணம். என் 7 ஆண்டு கனவு, மூன்று ஆண்டு முயற்சி, ஓர் ஆண்டு உழைப்பு இந்தத் திரைப்படத்தில் அடங்கியிருக்கிறது. ஆவணப்படம் ஏன், எதற்கு தயாரிக்கப்பட்டதிற்கு மூன்று முக்கியக் காரணங்கள் உள்ளன.

முதல் காரணம், வைகோவின் 56 ஆண்டு கால பொது வாழ்க்கை. அவர் தமிழ் மொழி, தமிழ் மக்களுக்காக அளித்த உழைப்பு, தொண்டு, தியாகம் பொதுமக்களுக்கும், இன்றைய தலைமுறையினருக்கும் தெரிய வேண்டும். இப்படிப்பட்ட உயர்ந்த மனிதனை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியவில்லையே என்று மக்கள் உணர வேண்டும்.

இரண்டாவது முக்கியக் காரணம், 29 ஆண்டுகளாக மதிமுக கட்சிக்காக, வைகோவிற்காக சிலர் உயிர்களை கொடுத்துள்ளனர். பலர் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளனர். இந்த சிலர், பலரின் பங்களிப்பு, அர்பணிப்பால் அந்த தொண்டர்கள், நிர்வாகிகள் குடும்பங்களில் நெருக்கடிகள், பொருளாதார பின்னடைவுகள் ஏற்பட்டன. அதையெல்லாம் பொறுத்துக் கொண்ட அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் புரிந்து கொள்வதற்காகவும் இந்தத் திரைப்படம் தயாரிக்கப்பட்டது.

அவர்கள், ‘என் கணவர், என் அண்ணன், தம்பிகள் வாழ்க்கையை இந்த உன்னதமான உயர்ந்த மனிததிற்காகவும், அவர்கள் மேற்கொண்ட அரசியல் பயணத்திற்காகவும் அர்ப்பணித்துள்ளனர், உழைத்துள்ளனர், நாங்கள் பட்ட கஷ்டம் வீணாகிப் போகவில்லை என்றும், வைகோவின் அரசியல் பயணத்தில், எங்கள் குடும்பத்திற்கும் பங்கு உண்டு மதிமுக தொண்டர்கள் பெருமிதம் கொள்வதற்காவும் இந்தத் திரைப்படம் உதவுகிறது.

மூன்றாவது காரணம்,வைகோவின் தமிழகத்திற்காக, 56 ஆண்டுகள் உழைத்துள்ளார், அவர் ஏற்றிய தீபம், தொடங்கிய இயக்கம் 100 ஆண்டிற்கு மேல் இயங்க வேண்டும் என்பதற்காகவும் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டது.

நான் ஒரு சாமானியன், என் தந்தை வைகோவைப் போல் சொல்வளம், அவரது ஆளுமை கிடையாது. ஆனால், ஊர் கூடினால் தேரை இழுக்கலாம் என்று சொல்வார்கள். ஆனால், மதிமுக தொண்டர்கள் பொதுமக்களுடன் இணைந்து உழைத்தால் தமிழகத்தில் வரலாறு படைக்கலாம்” என்று அவர் பேசினார்.

தியாகராசர் கல்வி நிறுவனங்கள் குழு தலைவர் தியாகராஜ் கருமுத்து கண்ணன், ஹரி தியாகராஜன், மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ புதூர் பூமிநாதன், சமூக ஆர்வலர் ஹென்றிடீபன், தமிழ்நாடு வர்த்தகச் சங்க முதன்மை தலைவர் ரத்தினவேலு மற்றும் மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in