தீபாவளி விடுமுறை | மதுரைக்கு ரூ.3000 - ஒரு மாதம் முன்பே ஆம்னி பேருந்துக் கட்டணம் பன்மடங்கு உயர்வு

தீபாவளி விடுமுறை | மதுரைக்கு ரூ.3000 - ஒரு மாதம் முன்பே ஆம்னி பேருந்துக் கட்டணம் பன்மடங்கு உயர்வு
Updated on
2 min read

சென்னை : தீபாவளி விடுமுறையில் சென்னையில் இருந்து வெளியூர் செல்வதற்கான ஆம்னி பேருந்துக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

பண்டிகை விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கு செல்வதற்கான ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து புகார்கள் வரும்போது எல்லாம் அதிகக் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை சார்பில் அறிவிக்கப்படும். ஆனால், இது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அடுத்த மாதம் 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாட்களில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

21ம் தேதி வெள்ளிக் கிழமை இரவு சென்னையில் இருந்து மதுரை செல்வதற்கான ஆம்னி பேருந்துக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி ஏசி அல்லாத பேருந்துகளில் குறைந்தபட்சமாக ரூ.1300 முதல் அதிகபட்சமாக ரூ.2000 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏசி பேருந்துகளில் குறைந்தபட்சம் ரூ.1500 முதல் அதிகபட்சமாக ரூ.3100 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதைப்போன்று சென்னையில் இருந்து கோவைக்கு குறைந்தபட்சம் ரூ.1000 முதல் அதிகட்சம் ரூ.3000 வரை கட்டணயம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திருச்சி, ஈரோடு, நாகர்கோவில் உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துக் கட்டணமும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், 22 மற்றும் 23-ம் தேதிகளிலும் பெரும்பாலான பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு வழக்கம்போல் கடைசி நேரத்திலோ அல்லது பண்டிகைகள் முடிந்த பின்போ நடவடிக்கை எடுக்காமல், முன்கூட்டியே இதற்கு நிரந்திரத் தீர்வு காண வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in