Published : 20 Sep 2022 12:03 PM
Last Updated : 20 Sep 2022 12:03 PM

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கிறார் இபிஎஸ்

எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம்

புதுடெல்லி: அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையிலான ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சமடைந்துள்ள நிலையில், டெல்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார்.

அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் கடந்த ஜூன் 23-ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, கூட்டத்தை நடத்திக் கொள்ளவும், ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்து விவாதிக்கக்கூடாது எனவும் தீர்ப்பளித்தனர். இதனை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

மேலும் 23-ம் தேதியன்று நடந்த கூட்டத்தில் அடுத்த கூட்டம் ஜூலை 11-ம் தேதியன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஜூலை 11-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி, ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்குகள் அனைத்திலும் இபிஎஸ்-க்கு ஆதரவாக தீர்ப்புகள் வந்தன. இதனைத் தொடர்ந்து, ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் இபிஎஸ் கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், அன்றைய தினம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மோதல் காரணாக கட்சி அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலக சாவியை ஒப்படைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அலுவலக சாவியை இபிஎஸ் வசம் ஒப்படைக்க உத்தரவிட்டது.

இதனிடையே நடந்துமுடிந்த குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல்களில், அதிமுகவினர் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இரண்டு அணிகளாகவே கலந்துகொண்டனர். மேலும், செஸ் ஒலிம்பியாட் உள்ளிட்ட நிகழ்வுகளுக்காக சென்னை வந்த பிரதமர் மோடியை இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தனித்தனியாகவே சந்தித்தனர்.

அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி, விரைவில் அக்கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவதற்கான பணிகளில் அவரது ஆதரவாளர்கள் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடனான அவரது இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x