ஜெகதாப்பட்டினம் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

அன்புமணி ராமதாஸ் | கோப்புப் படம்
அன்புமணி ராமதாஸ் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 8 பேரை, உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: "வங்கக் கடலில் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 8 பேரை, அவர்களின் படகுகளுடன் இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர். இலங்கைப் படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதற்கு அடுத்த இரு நாட்களில் மீண்டும் மீனவர்கள் கைது செய்யப்படுவது வாடிக்கையாகி வருகிறது. கடந்த 7ம் தேதி கைது செய்யப்பட்ட 12 மீனவர்கள் சில நாட்களுக்கு விடுதலையான நிலையில் அடுத்த கைது அரங்கேறியிருக்கிறது.

வங்கக் கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதால் மீனவர்கள் அச்சத்திற்கு ஆளாகியிருக்கின்றனர். மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்ட 8 மீனவர்களையும், இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 100 படகுகளையும் விடுவிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்" என்று அன்புமணி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in