Published : 20 Sep 2022 04:10 AM
Last Updated : 20 Sep 2022 04:10 AM

வலிப்பு வந்தபோது கையில் கொடுத்ததால் விபரீதம்: இளம்பெண்ணின் கழுத்தில் பாய்ந்த கம்பியை வெற்றிகரமாக அகற்றிய அரசு மருத்துவர்கள்

கோவை

கோவை அரசு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி 28 வயது இளம்பெண் ஒருவர் கழுத்தின் முன்பகுதியில் இரும்பு கம்பி குத்தி, கை, கால்களின் இயக்கம் பாதிக்கப்பட்ட நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

வலிப்பு வந்தபோது கையில் கொடுக்கப்பட்ட கம்பி குத்தியதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்கேன், இதர பரிசோதனைகளின் முடிவில் கழுத்தின் வலது பக்கம் பாய்ந்த கம்பியானது மூச்சுக்குழாய், உணவுக்குழாய், ரத்தநாளங்களின் மிக அருகில் பாய்ந்து, தண்டுவட எலும்பை துளைத்து குத்தியிருப்பது தெரியவந்தது.

நரம்பியல் அறுவை சிகிச்சை துறை தலைவர் வெங்கடேஷ், டாக்டர் பிரதீப், இதய அறுவைசிகிச்சை துறை மருத்துவர்கள் மின்னத்துல்லா,

அரவிந்தன், மயக்கவியல் துறை தலைவர் கல்யாணசுந்தரம், மயக்கவியல் மருத்துவர் பிரசன்னா ஆகியோர் அடங்கிய குழுவினர் சுமார் 2 மணி நேரம் அறுவைசிகிச்சை செய்து கம்பியை வெற்றிகரமாக அகற்றினர்.

அதற்குப்பின், இளம்பெண்ணின் கை, கால்கள் இயக்கம் சீரடைந்து வீடு திரும்பினார். இந்த சிக்கலான அறுவைசிகிச்சையை மேற்கொண்ட மருத்துவ குழுவினரை டீன் நிர்மலா பாராட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x