Published : 20 Sep 2022 04:15 AM
Last Updated : 20 Sep 2022 04:15 AM

சமத்துவபுரம் வீடு ஒதுக்கீட்டில் முறைகேடு: கிருஷ்ணகிரி ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார்

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரையை அடுத்த கதவணி சமத்துவபுரத்தில் வீடுகள் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளது என கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.

கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து 342 கோரிக்கை மனுக்களை பெற்றார்.

மேலும், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு பரிந்துரை செய்தார்.

இதில், ஊத்தங்கரையைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ‘ஊத்தங்கரை அடுத்த கதவணி சமத்துவபுரத்தில் கடந்த 2013-ம் ஆண்டு 100 வீடுகள் கட்டப்பட்டன. சமத்துவபுரத்தில் வீடுகள் கோரி நாங்கள் மனு செய்திருந்தோம். ஆனால், வழங்கவில்லை.

தற்போது, நாங்கள் கதவணி ஊராட்சி நிர்வாகத்திடம் மீண்டும் இலவச வீடு வழங்கக் கோரி மனு அளித்த போது, கடந்த, 2013-ம் ஆண்டே வீடுகள் ஒதுக்கப்பட்டதாக தகவல் தெரிந்தது. எனவே, சமத்துவபுரம் வீடுகள் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளது.

எனவே, இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலவலர் ராஜேஸ்வரி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாக்கியலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் ஐயப்பன், உதவி ஆணையர் (ஆயம்) பாலகுரு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x