தேமுதிகவின் 18-ம் ஆண்டு தொடக்க விழா: பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்பு

தேமுதிகவின் 18-ம் ஆண்டு தொடக்க விழா: பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்பு
Updated on
1 min read

தாம்பரம்: செங்கல்பட்டு மாவட்ட தேமுதிக சார்பில் மாவட்ட செயலாளர் அனகை முருகேசன் தலைமையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் 70-வது பிறந்த நாள் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் தேமுதிகவின் 18-ம் ஆண்டு தொடக்க விழா மேற்கு தாம்பரம் சண்முகம் சாலையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

எதிர்க்கட்சி அந்தஸ்து: அப்போது நிகழ்ச்சியில் பிரேமலதா பேசியதாவது: எந்த லட்சியத்துக்காக இந்த கட்சி தொடங்கப்பட்டதோ அந்த லட்சியத்தை விரைவில் அடைவோம். உண்மை தொண்டர்களால் கட்சி தொடங்கப்பட்டு சில ஆண்டுகளிலேயே எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றோம். பேனர்கள் கட் அவுட்டுகள் வைப்பதை தொண்டர்கள் தவிர்த்து விட்டு அதற்கு மாறாக ஏழைகளுக்கு உதவிகள் செய்ய வேண்டும். திமுக ஆட்சி வருவதற்கு முன் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் ஆட்சிக்கு வந்த பிறகு நிறைவேற்றப்படவில்லை. வீட்டு வரி உயர்வு, மின் கட்டண உயர்வு போன்றவற்றை அதிகரித்து மக்கள் மீது சுமையை இந்த அரசு ஏற்றியுள்ளது. ரூ.80 கோடியில் பேனா சிலை அமைப்பதால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in