Published : 19 Sep 2022 03:18 PM
Last Updated : 19 Sep 2022 03:18 PM

குற்ற விசாரணை அடையாள சட்டப் பிரிவுகளை எதிர்த்த வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம்

சென்னை: குற்ற வழக்குகளில் தண்டிக்கப்படுபவர்கள், கைது செய்யப்பட்டவர்களின் அங்க அடையாளங்களை சேகரிக்க வகை செய்யும் குற்ற விசாரணை அடையாள சட்டப் பிரிவுகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள், தடுப்புக் காவலில் வைக்கப்படுபவர்களின் கை ரேகைப் பதிவுகள், கருவிழி மற்றும் விழித்திரைப் பதிவுகள், உடல் மற்றும் உயிரியல் மாதிரிகளை சேகரிக்கவும், சேமித்து வைக்கவும் காவல்துறை மற்றும் சிறை அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கும் வகையில் குற்ற விசாரணை அடையாளச் சட்டம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுள்ள இச்சட்டம், 2022-ம் ஆண்டு ஏப்ரல் 18-ம் தேதி அரசிதழில் வெளியிட்டு அமலுக்கு வந்துள்ளது. இந்தச் சட்டத்தில், தனிமனித சுதந்திரத்தை, உரிமையை பறிக்கும் வகையில் உள்ள பிரிவுகளை ரத்து செய்யக் கோரி சென்னையைச் சேர்ந்த ஆதர்ஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், "மக்கள் நல அரசான இந்திய அரசு, தண்டனை விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் எந்தச் சட்டமும் இயற்ற முடியாது. அதிகாரிகளுக்கு கட்டுப்பாடற்ற அதிகாரம் வழங்கும் இந்த சட்டப் பிரிவுகள் ரத்து செய்யப்பட வேண்டும். கைது செய்யப்பட்டவர்கள், தண்டிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை பதிவு செய்வதை கட்டாயப்படுத்தும் இந்த சட்டப் பிரிவுகள் தன்னிச்சையானவை. இது சம்பந்தமான உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வழிவகை செய்யாதது சட்ட விரோதமானது. இது இயற்கை நீதிக்கு முரணானது" என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுவுக்கு ஆறு வாரங்களில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x