Published : 19 Sep 2022 03:14 PM
Last Updated : 19 Sep 2022 03:14 PM

“எனது பேரன், பேத்திக்கும் கூட காய்ச்சல் பாதித்து 3 நாட்களில் குணமடைந்தனர்” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: “எனது பேரன், பேத்தி கூட காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 3 நாட்களில் குணமடைந்துவிட்டனர்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழகத்தில் பருவமழைக் காலங்களில் காய்ச்சல் சதவீதம் அதிகரிப்பது வழக்கம்தான். சாதாரண காலங்களில் 1% பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கும். தற்பொழுது ஒன்றரை சதவீதமாக பாதிப்பு உள்ளது. இதனால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை.

இதுவரை 368 பேருக்கு இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், 5 வயதுக்கு கீழ் 42 குழந்தைகளுக்கும், 5 வயது முதல் 14 வயது வரை உள்ளவர்கள் 65 பேருக்கும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 69 பேருக்கும் இன்ஃப்ளுயன்சா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 368 பேரில், 264 பேர் தனியார் மருத்துவமனையிலும், 89 பேர் வீடுகளிலும், அரசு மருத்துவமனைகளில் 15 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.

லேசான அறிகுறி இருந்தால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். பள்ளியில் ஆசிரியர்களும் கண்காணித்து அறிகுறி இருந்தால் பெற்றோர்களுக்கு தகவலளித்து வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

எனது பேரன்,பேத்திக்குமே கூட காய்ச்சல் பாதித்து 3 தினங்கள் சிகிச்சை பெற்று தற்பொழுது நலமுடன் உள்ளனர். இதனால் அச்சப்படத்தேவையில்லை" என்று அமைச்சர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x