Published : 19 Sep 2022 06:52 AM
Last Updated : 19 Sep 2022 06:52 AM

சிறப்பாக செயல்படுகிறார் மு.க.ஸ்டாலின்: அதிமுக எம்எல்ஏ வி.பி.கந்தசாமி பாராட்டு

வி.பி.கந்தசாமி

கோவை: மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா வரிசையில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவத் துறைக்கு தனி கவனம் செலுத்தி மக்களை காப்பதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என, சூலூர் அதிமுக எம்எல்ஏ வி.பி.கந்தசாமி தெரிவித்தார்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பள்ளபாளையம் பேரூராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.

இதில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டனர். மேலும், தனியார் மருத்துவமனை மருத்துவர்களும் முகாமில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பரிசோதனை மேற்கொண்டனர்.

நிகழ்வில் கலந்துகொண்ட அதிமுகவை சேர்ந்த சூலூர் எம்எல்ஏ வி.பி.கந்தசாமி பேசும்போது, “திமுக, அதிமுகவின் சின்னங்கள் வேறானாலும் எண்ணங்கள் எல்லாம் ஒன்றுதான். அது தொகுதியின் வளர்ச்சிக்காகத்தான் இருக்கும். தமிழகத்தில் மட்டுமல்ல, உலகில் பல நோய்கள் பரவி வருகிறது. இருப்பினும், தமிழகத்தில் மருத்துவத்துறை சவாலை எதிர்கொண்டு செயலாற்றி வருகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா வரிசையில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவத் துறைக்கு தனி கவனம் செலுத்தி மக்களை காப்பதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்” என்றார்.

நிகழ்வில் பள்ளபாளையம் பேரூராட்சி தலைவர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x