Published : 19 Sep 2022 07:32 AM
Last Updated : 19 Sep 2022 07:32 AM

ஆத்தூர் அருகே நின்றிருந்த ஆம்னி பேருந்து மீது லாரி மோதி 6 பேர் உயிரிழப்பு

செந்தில்வேலன்

சேலம்: சேலம் ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தில் நள்ளிரவில் நின்றிருந்த ஆம்னி பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர். விபத்துக்கு காரணமான லாரி மற்றும் ஆம்னி பேருந்து ஓட்டுநர்களை போலீஸார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர்அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, தனது பேத்தியின் மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்துகொள்ள உறவினர்களுடன் சென்னை செல்லும் தனியார் ஆம்னி பேருந்தில் டிக்கெட் பதிவு செய்திருந்தார்.

அதன்படி, நேற்று முன்தினம் நள்ளிரவு பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகம் அருகேசேலத்தில் இருந்து வந்த தனியார் ஆம்னி பேருந்தில் சீர்வரிசைப் பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது, சேந்தமங்கலத்தில் இருந்து எம்-சாண்ட் மணல் பாரம் ஏற்றி வந்த டாரஸ் லாரி ஆம்னி பேருந்து மீது மோதியது. இதில், பெத்தநாயக்கன்பாளையம் சிவன் கோயில் தெருவைச் சேர்ந்த திருநாவுக்கரசு(63), அவரது மகன் ரவிக்குமார்(41), தலைவாசல் ஆறகளூரைச் சேர்ந்த செந்தில்வேலன் (46), கொத்தாம்பாடியைச் சேர்ந்த சுப்பிரமணி (40) மற்றும் ஆம்னி பேருந்தின் கிளீனரான சேலத்தைச் சேர்ந்த தீபன் சக்கரவர்த்தி (21) ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஏத்தாப்பூர் போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், காயமடைந்த திருநாவுக்கரசுவின் மனைவி விஜயா(60), உறவினர்களான மாதேஸ்வரி(60), அவரது மகன்ஜெயப்பிரகாஷ் (40) ஆகியோரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். செல்லும் வழியில் விஜயா உயிரிழந்தார். மாதேஸ்வரி, ஜெயபிரகாஷ் ஆகியோர் சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஓட்டுநர்கள் கைது: விபத்து குறித்து ஏத்தாப்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அதிவேகமாக வந்த டாரஸ் லாரியின் ஓட்டுநர் சேந்தமங்கலம் பச்சனம்பட்டியைச் சேர்ந்த கார்த்திக், தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றிய ஆம்னி பேருந்தின் ஓட்டுநர் பரமேஸ்வரன் ஆகியோரை கைது செய்தனர். விபத்து நடந்த பகுதியில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் எஸ்பி ஸ்ரீ அபிநவ், ஆத்தூர் ஆர்டிஓ சரண்யா உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

அடிக்கடி விபத்து: சேலம்-ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து நடந்து வருவதால் மக்கள் அச்சம்அடைந்துள்ளனர். கடந்த மாதம்ஆத்தூர் அருகே நடந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். அதன்பின்னர் நடந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் நடந்த விபத்தில் 6 பேர் இறந்தனர். தேசிய நெடுஞ்சாலையில் விபத்து பகுதிகளை கண்டறிந்து அறிவிப்பு பலகை, தடுப்புகள் உள்ளிட்ட விபத்து தவிர்ப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x