Published : 19 Sep 2022 02:28 PM
Last Updated : 19 Sep 2022 02:28 PM

சாதாரண பயிர்களை விட மரப் பயிர்களில் 5 மடங்கு கூடுதல் லாபம்: காவேரி கூக்குரல் கருத்தரங்கில் தகவல்

துறையூரில் நேற்று நடைபெற்ற மரப் பயிர் சாகுபடி கருத்தரங்கில் பேசுகிறார் மருத்துவர் வினோலா. உடன் முன்னோடி விவசாயிகள்.

திருச்சி

சாதாரண பயிர்களை விட மரப் பயிர்களில் 3 முதல் 5 மடங்கு கூடுதல் லாபம் கிடைக்கும் என முன்னோடி விவசாயிகள் தெரிவித்தனர்.

காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பில் திருச்சி மாவட்டம் துறையூர் வட்டத்தில் உள்ள ‘லிட்டில் ஊட்டி' என்ற வேளாண் காட்டில் மரப் பயிர் சாகுபடி கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.

இதில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மரப் பயிர் விவசாயி பூமாலை பேசியது: மரப் பயிர்களிலேயே மலைவேம்பை மிக குறுகிய காலத்தில் அறுவடை செய்து விற்கலாம். மரங்களுடன் சேர்த்து சமவெளியில் மிளகும் சாகுபடி செய்து வருகிறேன்.

மிளகு கொடி நான்காம் ஆண்டிலிருந்து காய்க்க தொடங்கிவிடும். ஒரு கிலோ மிளகு தற்போது ரூ.1,000 என்ற விலையில் விற்பனை ஆகிறது. ஒரு ஏக்கரில் 300 கிலோ முதல் 400 கிலோ வரை மிளகு மகசூல் எடுக்க முடியும். அந்த வகையில் மிளகிலிருந்து மட்டும் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் கூடுதலாக லாபம் கிடைக்கும் என்றார்.

கோவையிலுள்ள வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் விஞ்ஞானி மாயவேல் பேசியது:

இந்தியாவில் ஆண்டுக்கு 153 மில்லியன் மெட்ரிக் மீட்டர் கியூப் அளவுக்கு மரத்தின் தேவை உள்ளது. அதில் கிட்டத்தட்ட 50–60 சதவீதம் தேவையை மட்டுமே உள்நாட்டிலிருந்து பூர்த்தி செய்ய முடிகிறது. எனவே, மர விவசாயம் செய்வதால் விவசாயிகள் கண்டிப்பாக லாபம் ஈட்ட முடியும் என்றார்.

ஓய்வுபெற்ற வேளாண் இணை இயக்குநர் டாக்டர் ஹரிதாஸ் பேசும்போது, “தற்போதைய மதிப்பீட்டின்படி ஒரு பலா மரத்திலிருந்து 50 ஆண்டுகளுக்கு பழத்திலிருந்து ரூ.1 கோடியும், மரத்திலிருந்து ரூ.1 கோடியும் வருவாய் ஈட்ட முடியும்.

பழத்தை நேரடியாக விற்பனை செய்வதை தவிர்த்து, ஜாம், அல்வா போன்று வேறு சில வகையில் மதிப்பு கூட்டி விற்பனை செய்ய முடியும்” என்றார்.

காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் பேசும்போது, “சத்குருவின் முயற்சியாலும் காவேரி கூக்குரல் இயக்கத்தின் களப் பணியாலும் மரம் சார்ந்த விவசாயத்துக்கு ஆர்வம் அதிகரித்திருக்கிறது.

இதன் விளைவாக கரோனா பாதிப்பு சூழலிலும் கடந்த 2 ஆண்டுகளில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் 2.10 கோடி மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு விநியோகித்துள்ளோம்.

இந்த ஆண்டு தமிழ்நாட்டில் மட்டும் ஒரு கோடி மரக்கன்றுகளை விநியோகிக்க திட்டமிட்டுள்ளோம். ஈஷா நர்சரிகள் மூலம் தரமான மரக்கன்றுகளை ரூ.3-க்கு விவசாயிகளுக்கு விநியோகித்து வருகிறோம்.

சாதாரண பயிர்களை விட மரப் பயிர் விவசாயம் செய்யும் விவசாயிகள் 3 முதல் 5 மடங்கு கூடுதல் லாபம் ஈட்டுவதை நாங்கள் கண்கூடாக பார்த்து வருகிறோம்” என்றார்.

இக்கருத்தரங்கின் தொடக்க விழாவில் தோட்டத்தின் உரிமையாளர் மருத்துவர் துரைசாமி, அவரது மகள் மருத்துவர் வினோலா, முன்னோடி விவசாயிகள் திருமலை, ராமன், பாக்கியராஜ் உள்ளிட்டோர் பேசினர்.

இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஏறத்தாழ 1,500 விவசாயிகள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x