Published : 18 Sep 2022 07:03 AM
Last Updated : 18 Sep 2022 07:03 AM

திருவள்ளுவர் பல்கலைக்கழக முறைகேடு - உயர்கல்வி துறையின் துணை செயலர் விசாரணை

வேலூர்: திருவள்ளுவர் பல்கலைக்கழக முறைகேடு புகார் குறித்து உயர்கல்வித் துறை துணை செயலர் விசாரணை நடத்தியுள்ளார்.

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று வேலூர் ஊரீசு கல்லூரி முன்னாள் பேராசிரியர் இளங்கோவன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை நடந்து வந்த நிலையில், திருவள்ளுவர் பல்கலைக்கழக சட்டம் 2002, விதி 8-ன்படி முறைகேடு புகார்கள் குறித்து விசாரணை நடத்த ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி நியமிக்கப்பட்டார். 3 மாதங்களில் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர்கல்வித் துறை செயலர் கார்த்திகேயன் கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டார்.

இந்நிலையில், உயர்கல்வித் துறை துணை செயலர் (பல்கலைக்கழகம்) இளங்கோ ஹென்றி தாஸ், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் விசாரணை நடத்தி, சில ஆவணங்களை சேகரித்துச் சென்றுள்ளார்.

இதுபற்றி பல்கலைக்கழக பேராசிரியர்கள் தரப்பில் கேட்டபோது, ‘‘விசாரணை குழு அமைத்து உத்தரவிட்டு 3 மாதங்கள் கடந்தும் விசாரணை தொடங்கப்படாததால், விசாரணை குழு தலைவர் மலர்விழிக்கு முன்னாள் பேராசிரியர் இளங்கோவன், மின்னஞ்சல் மூலம்புகார் அனுப்பினார். அதன்பேரில், முதல்கட்ட விசாரணைக்காக பல்கலைக்கழகத்துக்கு வந்த உயர்கல்வித் துறை துணை செயலர் இளங்கோ ஹென்றி தாஸ், துணைவேந்தர் ஆறுமுகத்தை சந்தித்து பேசியுள்ளார். சுமார் 4 மணி நேரம் விசாரணை நடந்தது’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x