Published : 17 Sep 2022 04:08 PM
Last Updated : 17 Sep 2022 04:08 PM

தமிழகத்தில் இன்ஃப்ளுயன்சா காய்ச்சலால் இதுவரை 965 பேர் பாதிப்பு; 10 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் 965 பேர் இன்ஃப்ளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சென்னை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனைக்கு center of excellence for rare diseases என்கின்ற சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

பருவ மழைக்கு முன்னால் வரும் காய்ச்சல் பாதிப்பு குழந்தைகளுக்கு வரக்கூடியதுதான். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பாதிப்பு இருந்ததால் காய்ச்சல் பாதிப்பு பெரிதாக தெரியவில்லை. எப்போதும் ஏற்படக்கூடிய பாதிப்புதான் தற்பொழுதும் ஏற்பட்டு இருக்கிறது. இன்று ஒரே நாளில் மட்டும் 47 பேர் இன்ஃப்ளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள். தமிழகத்தில் 965 பேர் இன்ஃப்ளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

குழந்தைகளுக்கு இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் பெற்றோர்கள் பள்ளிகளுக்கு அனுப்பக் கூடாது. பள்ளிகளில் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தால் வீடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும். தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லை. அதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதற்கான அவசியம் இல்லை.

மருந்து சீட்டு இல்லமால் எந்த மருந்தும் கொடுக்கக் கூடாது என்று மருந்து கடைகளுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களும், மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் மருந்து கடைகளுக்கு சென்று மருந்துகள் வாங்க கூடாது" என்று அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், அரசின் மீது உள்ள கோபத்தால் மருந்து தட்டுப்பாடு என்ற குற்றச்சாட்டை ஒரு சிலர் கூறி வருகின்றனர் என்றும், தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை என்றும் அவர் தெரிவித்தார். அதன் விவரம்: “அரசின் மீதான கோபத்தால் குற்றச்சாட்டு” - தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை என மா.சுப்பிரமணியன் விளக்கம்

அறிகுறிகள் என்ன?

  • இன்ஃப்ளூவன்சா வைரஸ் காய்ச்சல் குழந்தைகளைத் தான் அதிகம் பாதிக்கும்.
  • ஜலதோஷம், மிக அதிக காய்ச்சல், விடாமல் ஏற்படும் இருமல் ஆகியவை இதன் அறிகுறியாகும்.
  • இந்த காய்ச்சல் சுவாச மண்டலத்தை அதிகம் பாதிக்கும்.
  • உடல் வலி, தலைவலி, சோர்வு, தொண்டை வறட்சி, வாந்தி , வயிற்று வலி போன்றவைகளும் இருக்கும்.

சிகிச்சை

  • இன்ஃப்ளூவன்சா வைரஸ் காய்ச்சல் முதல் 4 நாட்களில் குணமாகிவிடும்
  • சிலருக்கு மட்டும் இருமலுடன் ஒரு வாரம் வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது.
  • இதற்கு ஏற்கனவே தடுப்பூசி உள்ளது.

பாதுகாப்பு வழிமுறைகள்

  • குழந்தைகளுக்கு இதற்கான தடுப்பூசி கட்டயாம் செலுத்த வேண்டும்.
  • வெளியில் சென்று வந்த பிறகு கைகளை கழுவிட்டு அல்லது குளித்து விட்டுதான் குழந்தைகளை தூக்க வேண்டும்.
  • வீட்டில் யாருக்காவது காய்ச்சல் இருந்தால் அவர் உட்பட அனைவரும் முக்கவசம் அணிய வேண்டும்.
  • காய்ச்சல் உள்ளவர்கள் கட்டாயம் தனிமையில் இருக்க வேண்டும்.
  • தொடக்க நிலையிலியே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்
  • காய்ச்சல் பாதிப்புக்கு சுயமாக மருந்து எடுத்துக் கொள்ளக் கூடாது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x