Published : 17 Sep 2022 12:09 PM
Last Updated : 17 Sep 2022 12:09 PM

சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு: பல்வேறு துறைகளுக்கு தலைமை செயலாளர் முக்கிய அறிவுறுத்தல்

சென்னை: சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டை முன்னிட்டு பல்வேறு துறைகளுக்கு தலைமை செயலாளர் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார்.

இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று, ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 2023ம் ஆண்டினை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்துள்ளது. இந்நிலையில் சிறுதானியங்கள் உற்பத்தியை உயர்த்தவும், பயன்பாட்டினை அதிகரிக்கவும், பல்வேறு வகையான விளம்பரப் பணிகளை மேற்கொள்வது தொடர்பான முதல் ஆலோசனைக் கூட்டம் நேற்று (16ம் தேதி ) தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், வேளாண்மை-உழவர் நலத்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு, பள்ளிக் கல்வி, உயர் கல்வி, சமூக நலம், ஊரக வளர்ச்சி, செய்தி மற்றும் மக்கள் தொடர்பு போன்ற துறைகள் மூலமாக 2023ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை 12 மாதங்களுக்கு மாதம்தோறும் செயல்படுத்த வேண்டிய தொழில்நுட்பம் மற்றும் விளம்பரப் பணிகள் குறித்த விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக கூட்டுறவு துறை, சமூக நலத் துறை போன்ற துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் பொது விநியோகம், மதிய உணவு, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் போன்ற திட்டங்களுக்குத் தேவையான சிறுதானியங்களை தமிழக விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்வதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று தலைமை செயலாளர் அறிவுறுத்தினார்.

சிறுதானியங்கள் குறித்த ஆராய்ச்சி குறைந்து வருவதால், சிறுதானிய ஆராய்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்தி, சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்கவும், தானியங்களின் சேமிப்புக் காலத்தினை கூட்டி மதிப்புக் கூட்டப்பட்ட சிறுதானியப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து அரசுக்கு உரிய பரிந்துரைகளை வழங்க தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக விஞ்ஞானிகளை தலைமை செயலாளர் கேட்டுக் கொண்டார்.

சிறுதானியங்களை சாகுபடி செய்யும் விவசாயிகளின் வருமானமும், வாழ்வாதாரமும் மேம்படுவதற்கு ஏற்ப, சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே வழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அனைத்துத் துறை அலுவலர்களையும் தலைமை செயலாளர் வலியுறுத்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x