Published : 16 Sep 2022 06:19 PM
Last Updated : 16 Sep 2022 06:19 PM

விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்த வருமான வரித் துறை உத்தரவுக்கான இடைக்கால தடை நீட்டிப்பு

சென்னை: 'புலி' படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் சம்பளத்தை மறைத்ததாக கூறி நடிகர் விஜய்க்கு 1.50 கோடி ரூபாய் அபராதம் விதித்த வருமான வரித் துறை உத்தரவுக்கு விதிக்கபட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016-17ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்த போது, அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித் துறை, நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015-ம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்தது. அதன்படி, புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என கண்டறிந்தது. வருமானத்தை மறைத்ததற்கான ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்து கடந்த ஜூன் 30-ம் தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில், "அபராதம் விதிப்பதாக இருந்திருந்தால், 2019-ம் ஆண்டிலேயே உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். எனவே காலதாமதமாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் மனுவுக்கு வருமான வரித்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு மீண்டும் நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஏற்கெனவே பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 26-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x